மும்பை: பிரசவத்தின் போது தோனி உடனில்லாமல் இருந்த நிமிடங்கள் குறித்து அவரின் மனைவி சாக்ஷி மனம் திறந்து பேசியுள்ளார். தோனி - சாக்ஷி தம்பதியினர் தங்களது 13வது திருமண நாளினை கொண்டாடி வருகிறார்கள்.
இதனையொட்டி ரசிகர்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். முதல் காதல் தோல்விக்கு பின் கிரிக்கெட் வாழ்க்கையின் உச்சத்தில் இருந்த தோனி, சாக்ஷியுடன் நட்பில் இருந்தார். 2007ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பைக்கு பின் சாக்ஷியிடம் காதலை வெளிப்படுத்தினார் தோனி. அதற்கு சாக்ஷி, நீண்ட தலை முடியை வெட்டினால் காதலை ஏற்பதாக கூற, தோனியோ உடனடியாக தலைமுடியை வெட்டிவிட்டு மீண்டும் காதலை வெளிப்படுத்தியுள்ளார்.

அன்று முதல் காதலர்களாக வலம் வந்த இவர்கள், 2010ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். முதல் சில ஆண்டுகளில் சாக்ஷியை மைதானங்களுக்கு அழைத்து வராத தோனி, தனது மகள் பிறந்த பின் இருவரையும் மைதானங்களுக்கு அழைத்து வரத் தொடங்கினார். இதன் மூலம் சாக்ஷி மற்றும் மகள் ஸிவா-வையும் கூட ரசிகர்கள் பின்பற்ற தொடங்கினார்கள்.
இந்த நிலையில் திருமண நாளான இன்று சாக்ஷி அளித்துள்ள நேர்காணலில், காதலுக்கு முந்தைய நாட்களில் கிரிக்கெட்டை பெரியளவில் பின்தொடர்ந்ததில்லை. ஆனால் நீண்ட தலைமுடியுடன் ஒருவர் விளையாடுகிறார் என்பது தெரியும். அப்போது என் அம்மா கூட தோனியின் ரசிகராக இருந்தார். அப்போது நானும் கூட அவருக்கு நீண்ட தலைமுடி இல்லை என்று அம்மாவிடம் கிண்டல் செய்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல், ஸிவா பிறந்தபோது சொந்தங்கள், நண்பர்கள் அனைவரும் மருத்துவமனை வந்துவிட்டார்கள். அனைவருக்கும் தோனி வரவில்லையா என்பதே கேள்வியாக இருந்தது. ஆனால் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஏனென்றால் அவருக்கு கிரிக்கெட் தான் முதலில் முக்கியம். எனக்கு தோனி தான் முக்கியம். காதலிக்கும் போது தியாகம் என்பதே இல்லை. தோனி சோகமாக்கவும், அவரை கோபப்படுத்தவும் என்னால் மட்டுமே முடியும் என்று தெரிவித்துள்ளார்.