மும்பை : அண்மைக் காலமாக இளம் வயது மாரடைப்பு அதிக அளவில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக விளையாட்டுப் போட்டியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் இளைஞர்கள் திடீரென்று மயங்கி விழுந்து உயிரிழக்கின்றனர்.
குறிப்பாக இதுபோன்ற சம்பவங்கள் எல்லாம் கால்பந்து போட்டிகளில் அதிகம் நடைபெறும். ஏனென்றால் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருப்பதால் வீரர்களுக்கு இதயத்தில் சிக்கல் ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படுவதும் உண்டு.

மேலும் கபடி போன்ற விளையாட்டிலும் இது அதிக அளவு நடைபெறும். ஆனால் தற்போது எல்லாம் கிரிக்கெட் போன்ற விளையாட்டிலும், இது நடைபெறுவது பெற்றோர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. கிரிக்கெட்டில் குறிப்பாக பேட்ஸ்மேன்களுக்கு பெரிய அளவில் உடல் உழைப்பு தேவையில்லை.
அப்படி இருக்கும் போது கிரிக்கெட் ஆடும் இளைஞர்கள் திடீரென்று உயிரிழப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த வகையில் மும்பையில் உள்ள தானே பகுதியில் கிரிக்கெட் போட்டி ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. தானே பகுதியில் உள்ள மீரா சாலையில் ஒரு மைதானத்தில் நடந்து கொண்டிருந்த போட்டியில் ஜெர்சி அணிந்து கொண்டிருந்த இளைஞர் ஒருவர் பேட்டிங் செய்து கொண்டிருந்தார்.
அப்போது திடீரென்று அவர் பந்தை சிக்ஸருக்கு அடித்து நின்ற அடுத்த நொடியிலே திடீரென்று மயங்கி நிலை குலைந்து கீழே விழுந்தார். இதனை அடுத்து அக்கம் பக்கத்தினர் அந்த இளைஞருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க முயன்றனர். அதனை அடுத்து மருத்துவமனையில் கொண்டு சென்ற போது அந்த இளைஞர் உயிரிழந்திருப்பது தெரிய வந்தது. இதன் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.