அமீரகத்தில் கம்பளை ஸாஹிராவின் மாபெரும் கிரிக்கெட் சுற்றுப்போட்டி - சீசன் 2
துபாய் : கம்பளை ஸாஹிராவின் பழைய மாணவர் சங்க அமீரக கிளை ஒருங்கிணைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட, மாபெரும் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது.
அமீரகத்தில் வசிக்கும் இலங்கையின் பாடசாலை பழைய மாணவர்களுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் சுற்றுப்போட்டி (Inter School Past Pupils Cricket League 2019 - Season 2) கடந்த 25 அக்டோபர் 2019 (வெள்ளி) அன்று அமீரகத்தில் ஷார்ஜா பகுதியில், அல் - பட்டியா கிரிக்கெட் மைதானத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

லீக் முறையில் நடைபெற்ற இப்போட்டித் தொடரில் சுமார் 21 அணிகள் பங்கேற்றதுடன், நான்கு பிரிவுகளாக குழுக்கள் அமைக்கப்பட்டு இரண்டு மைதானங்களில் போட்டிகள் நடைபெற்றன.
அமீரகத்தின் "கேன்டி கார்ஸ் ட்ரேடிங்" (Kandy Cars Trading UAE) நிறுவனத்தின் உதவியுடன் நடைபெற்ற இந்த கிரிக்கெட் தொடரில் அமீரக வாழ் இலங்கை பாடசாலைகளின் 21 அணிகள் பங்கேற்றனர்.
இதில் அமீரகத்தில் உள்ள இலங்கையின் மிக முக்கிய பாடசாலைகளின் அமீரகக்கிளை பிரிவுகள், இலங்கை சார் ஒன்றியங்கள் மற்றும் இலங்கை சார்ந்த பல அணிகள் கலந்து சிறப்பித்தனர். இதில் முறையே பின்வரும் அணிகள் வெற்றியை தம் வசமாக்கிக் கொண்டனர்.
தங்கக் கோப்பை (முதல் இடம்) - வேலுவானா கல்லூரி, கொழும்பு
தங்கக் கோப்பை (இரண்டாம் இடம்) - எஸ் டி எஸ் ஜெயசிங்கே மத்திய கல்லூரி, லாவினியா
வெள்ளிக் கோப்பை (முதல் இடம்) - ஜிண்டோடா மஹா வித்யாலயா, காலே
வெள்ளிக் கோப்பை (இரண்டாம் இடம்) - டான் பாஸ்கோ, நெகாம்போ

கம்பளை ஸாஹிராவின் அமீரக கிளையின் முக்கிய ஆளுமைகளான திரு. முஹம்மது ஐஷாக், திரு. முஹம்மது பர்ஹான், திரு. முஹம்மது ரஸீன் கூட்டு முயற்சியில் உருவான இந்த கிரிக்கெட் சுற்று போட்டி அமீரகத்தில் இரண்டாவது முறையாக நடைபெறுவதுடன் எதிர்வரும் காலங்களில் இன்னும் மேம்படுத்தப்பட்ட முறையில் நடக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்நிகழ்வில் எங்களுக்கு ஆதரவு அளித்த கம்பளை ஸாஹிராவின் பழைய மாணவர்கள், குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் இந்த தொடரை சிறந்த முறையில் நடத்தி சகல விதத்திலும் உதவிய நிர்வாக குழு உறுப்பினர்கள், பங்காற்றிய அனைத்து பாடசாலை அணிகளின் பழைய மாணவர்கள், மற்றும் நிதி ஆதரவு தந்து உதவிய நிறுவனங்களுக்கும் கம்பளை ஸாஹிரா சார்பாக கம்பளை ஸாஹிராவின் அமீரக கிளை பழைய மாணவர் சங்க விளையாட்டு பிரிவு தலைவர் திரு. முஹம்மது ரஸீன் அவர்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொண்டார்

மத்திய மாகாணத்தில் கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள கம்பளை ஸாஹிரா கல்லூரி கலப்புப் பாடசாலையாக இருப்பதால், மூன்று அதிகாரப்பூர்வ மொழிகளில் ஏதேனும் ஒன்றில் மாணவர்கள் படிக்க இந்த கல்லூரி வாய்ப்பளித்துள்ளது. தற்போது தரம் 1 முதல் உயர்தரம் வரை சுமார் 94 வகுப்புகள் உள்ளன, சுமார் 3,500 மாணவர்கள் தங்கள் படிப்பை மேற்கொள்கின்றனர். ஸாஹிரா கல்லூரி நாட்டின் பல்வேறு தேசிய இனங்களிடையே நல்லிணக்கத்தை எவ்வாறு வளர்ப்பது என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.
கம்பளை ஸாஹிரா பல்லின, பல மத, பல கலாச்சார கல்லூரியாக கடந்த பல தசாப்தங்களாக இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்த பல அறிஞர்கள் மற்றும் புகழ்பெற்ற அரசியல்வாதிகளை இந்த கல்லூரி உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சிறப்பான கல்லூரியின் நற்பெயர் இப்போது நாடு முழுவதும் பரவியுள்ளது, நாடு முழுவதிலுமிருந்து பல மாணவர்களும் பெற்றோர்களும் இப்போது இந்த கல்லூரியை ஒரு பிரகாசமான எதிர்காலத்திற்கான பாதையாக தேர்வு செய்கிறார்கள்.
வெளியக, உள்ளக விளையாட்டுகள் மற்றும் இலக்கிய செயல்பாடுகளுக்கு இந்த கல்லூரியில் பெரும் உத்வேகம் அளிக்கப்படுகின்றது. அனைத்து துறையிலும் சிறந்து விளங்கும் கம்பளை சாஹிரா காலத்தால் அளிக்க முடியாத ஒரு சொத்து ஆகும்.
செய்தி - ஷம்ரான் நவாஸ் - துபாய்


Click it and Unblock the Notifications