நாகர்கோவில் : கிரிக்கெட் என்பது இந்தியாவில் ஒரு மதமாகவே பார்க்கப்படுகிறது. இந்திய அணியில் உங்களுக்கு இடம் கிடைத்தால் போதும், ஏழ தலைமுறைக்கு வீட்டில் உட்கார்ந்து சாப்பிடலாம். ஆனால், அது இந்திய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மட்டும் கிடைத்த வரம்.
இந்தியாவில் மற்ற கிரிக்கெட் வீரராக நீங்கள் இருந்தால், உங்களுக்கு வலியும், வேதனையும் மட்டுமே மிஞ்சும். ஆம், பார்வையற்றவர்களுக்கான கிரிக்கெட் போட்டி, மாற்றுத் திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டி என பல கிரிக்கெட் போட்டிகள் உள்ளன. இதை எல்லாம் பிசிசிஐ கவனித்ததே கிடையாது.

தற்போது தான் பல ஆண்டு கோரிக்கைக்கு பிறகு மகளிர் கிரிக்கெட்டை பிசிசிஐ வளர்த்து வருகிறது. இதனால், மற்ற கிரிக்கெட் வகை பக்கம் திரும்ப பிசிசிஐக்கு இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம். இந்த நிலையில், ஜெயன் ஆல்ட் என்ற இந்திய வீல்சேர் கிரிக்கெட் அணி வீரர்.(பாகிஸ்தான் எதிராக ஹாட்ரிக் எடுத்தவர்) 42 வயதான இவர் தனது வீட்டில் மின் இணைப்பு இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறார்.
கன்னியாகுமரி மாவட்டம், அழகம்பாறை சாலையில் உள்ள உட்புறமான மூன்றாவது வீடு இவருடையது. முதல் இரண்டு வீடுகளில், சித்தப்பா மகன்கள் வசித்து வருகின்றனர். ஆனால், இவருடைய வீட்டுக்கு குடும்ப பிரச்சினை காரணமாக உறவினர்கள் மின் இணைப்பு ஏற்படுத்தி கொள்ள அனுமதி தருவது இல்லை.
திருவிழாவில் பொம்மைக் கடை, பலூன், ஐஸ் வியாபாரம், டெக்கரேசன் தொழில் போன்ற விசயங்களில் ஈடுபட்டு உழைத்து வருகிறார். இவரை போல் பல தமிழ்நாடு வீல்சேர் கிரிக்கெட் அணி வீரர்களுக்கு அரசு உதவ முன்வர வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. தற்போது Jeyan Alt வீட்டுக்கு ஒரு நல்ல மின் வசதி செய்து தர, அவர்களுடைய நண்பர்கள் முயற்சி செய்து வருகிறார்கள்.
ஜெயன் ஆல்ட்க்கு 9 மாதத்தில் குழந்தை இருப்பதால், அவசர தேவைக்காக சோலார் பேட்டரி மூலம் மின்சாரம் கிடைக்க, அவர்களுடைய நண்பர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். ஜெயன் ஆல்ட் விசயத்தில் தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுத்து, அவருக்கு மின் இணைப்பு ஏற்படுத்தி தர உதவ வேண்டும் என்றும், விளையாட்டு ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.