டெல்லி : இந்திய கிரிக்கெட் வாரியத்தின் விதிமுறையை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியை விசாரிக்க 3 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
தோனி, மற்றும் சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா உள்ளிட்டோரின் விளம்பர விவகாரங்களை ஒப்பந்த அடிப்படையில் ரித்தி ஸ்போர்ட்ஸ் என்ற தனியார் நிறுவனம் கவனித்து வருகிறது.

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வர்த்தக விவகாரங்களையும் இந்த நிறுவனம் தான் மேலாண்மை செய்கிறது.
இந்த நிறுவனத்தில் தோனிக்கும் 15% பங்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. ஏனெனில் இந்த நிறுவனத்தின் உரிமையாளரான அருண் பாண்டே தோனியின் நெருங்கிய நண்பர்.
இந்த நிலையில் இரட்டை ஆதாயம் பெறும் வகையில் ரித்தி ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் தோனி அங்கம் வகிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் விதிமுறைக்கு முரண்பட்டதாகும்.
இதையடுத்து இந்த பிரச்சினையை இந்திய கிரிக்கெட் வாரியம் தற்போது கையில் எடுத்துள்ளது. இந்த விவகாரம் பற்றி விசாரிக்க இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் ஜக்மோகன் டால்மியா தலைமையில் 3 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இந்த கமிட்டி தோனியிடம் ரகசியமாக விசாரணை நடத்தும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.