சரிந்த ஆஸி.யை சதம் போட்டுக் காத்த பான்டிங்
அகமதாபாத்: சரிவைச் சந்தித்த ஆஸ்திரேலியாவை, தனது சிறப்பான மற்றும் அழகான சதத்தால் காத்து, நிமிர வைத்து விட்டார் கேப்டன் ரிக்கி பான்டிங்.
இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்று முக்கியமான நாள். இன்று அகமதாபாத்தில் நடந்த காலிறுதிப் போட்டியில் வென்றால்தான் இந்தியாவின் உலகக் கோப்பைக் கனவு நீடிக்க முடியும் என்பதால் இந்த முக்கியத்துவம்.
அகமதபாத்தில் நடந்த இந்தப் போட்டியில் முன்னாள் சாம்பியனான இந்தியா, நடப்புச் சாம்பியனான ஆஸ்திரேலியாவைச் சந்தித்தது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பான்டிங் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்கள் ஹாடினும், வாட்சனும் நிதானமான ரன் குவிப்பில் ஈடுபட்டபோது அஷ்வின் தனது அபாரமான பந்து வீச்சால், வாட்சனை 25 ரன்களுக்கு ஆட்டமிழக்க வைத்தார்.
இருப்பினும் ஹாடின் தொடர்ந்து சிறப்பாக ஆடி 53 ரன்களைக் குவித்தார். அவரை யுவராஜ் சிங் அவுட்டாக்கினார்.
மறு முனையில் கேப்டன் பான்டிங் நிதானமான முறையில் ரன்களை உயர்த்திக் கொண்டு போனார். அதேசமயம், எதிர் முனையில் பேட்டிங் ஆர்டர் சீர்குலைய ஆரம்பித்தது.
மைக்கேல் கிளார்க், கேமரூன் ஒயிட், ஹஸ்ஸி ஆகியோர் சொற்ப ரன்களில் வீழ ஆஸ்திரேலியா நெருக்கடிக்குள்ளானது. இருப்பினும் பான்டிங் சற்றும் சளைக்காமல் ரன் குவிப்பில் கவனம் செலுத்தினார். இவரது சிறப்பான ஆட்டத்தால்தான் இன்று ஆஸ்திரேலியா நல்ல ஸ்கோரை எட்ட முடிந்தது என்றால் மிகையில்லை.
சிறப்பாக ஆடிய பான்டிங் 118 பந்துகளில் 104 ரன்களை எடுத்து அஷ்வின் பந்தில் ஆட்டமிழந்தார்.
இது பான்டிங்குக்கு 30வது ஒரு நாள் சதமாகும். அதேசமயம், உலகக் கோப்பையில் இது 5வது சதமாகும்.
தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்தது. டேவிட் ஹஸ்ஸி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 38 ரன்கள் எடுத்திருந்தார்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:45 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications
