ஆன்டிகுவா: வெஸ்ட் இண்டீஸ் வேகப் பந்துவீச்சாளர் அல்சாரி ஜோசப்புக்கு இரண்டு போட்டிகளில் ஆட தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. சமீபத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணி ஆடிய மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது அல்சாரி ஜோசப் கேப்டன் ஷாய் ஹோப் உடன் மோதலில் ஈடுபட்டு இருந்தார்.
கேப்டனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அல்சாரி ஜோசப் அந்தப் போட்டியின் நான்காவது ஓவர் முடிவில் ஆடுகளத்தை விட்டு வெளியேறினார். பின்னர் ஆறாவது ஓவரின் போது மீண்டும் களத்துக்கு வந்தார். அதனால், ஐந்தாவது ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 10 வீரர்களை மட்டும் வைத்துக் கொண்டு ஆடியது. அதனால், போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் கிரிக்கெட் உலகில் கடும் விமர்சனத்தையும் சந்தித்து இருந்தது. அல்சாரி ஜோசப் செய்தது தவறு எனவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கூறி இருந்தனர். இந்த நிலையில் கிரிக்கெட் வெஸ்ட் இண்டீஸ் அமைப்பு அல்சாரி ஜோசப் மீது நடவடிக்கை எடுத்து இருக்கிறது.
இது பற்றி அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், கிரிக்கெட் வெஸ்ட் இண்டீஸ் அமைப்பின் தொழில்முறை தர்மத்தை அல்சாரி ஜோசப் கடை பிடிக்கவில்லை எனவும், கிரிக்கெட் வெஸ்ட் இண்டீஸ் அமைப்பின் நன்மதிப்புகளை காக்கும் வகையில் அவர் நடந்து கொள்ளவில்லை எனவும், இது போன்ற மோசமான நடவடிக்கையை நாம் அப்படியே விட்டுவிட முடியாது என்பதால் அந்த சம்பவத்தின் அழுத்தத்தை உணர்ந்து அவருக்கு இரண்டு போட்டிகளில் ஆட தடை விதிக்கப்படுகிறது என அறிவித்து இருக்கிறது.
அல்சாரி ஜோசப் இந்த சம்பவம் குறித்து மன்னிப்பு கேட்டு இருக்கிறார். அவரது மன்னிப்பு அறிக்கையில், "போட்டியின் மீதான எனது ஆர்வம் என்னை மிஞ்சிவிட்டது. நான் கேப்டன் ஷாய் ஹோப் மற்றும் சக வீரர்களிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்டேன். அணி நிர்வாகத்திடமும் மன்னிப்பு கேட்டேன். வெஸ்ட் இண்டீஸ் ரசிகர்களிடமும் எனது மன்னிப்பை கேட்டுக் கொள்கிறேன்."
"ஒரு சிறிய தவறான மதிப்பீடு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை புரிந்து கொண்டேன். என்னால் நடந்த ஏமாற்றத்துக்காக நான் வருந்துகிறேன்." என்று கூறி இருக்கிறார் அல்சாரி ஜோசப். வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இருந்தது. ஒருவேளை வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தப் போட்டியில் தோல்வி அடைந்திருந்தால் இந்த சம்பவம் மேலும் விஸ்வரூபம் எடுத்திருக்கும்.
அந்த வகையில் அல்சாரி ஜோசப் இரண்டு போட்டி தடையுடன் தப்பி இருக்கிறார். வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்து இங்கிலாந்து அணியுடன் டி20 தொடரில் மோத உள்ளது. அந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் அல்சாரி ஜோசப் அணியில் இருந்து விலக்கி வைக்கப்பட்டு இருப்பார். இது ஒரு வகையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பாதிப்பாகவும் அமையும்.
அல்சாரி ஜோசப் வெஸ்ட் இண்டீஸ் டி20 அணியின் முதன்மை வேகப் பந்துவீச்சாளராக இருந்து வருகிறார். எனவே, அவருக்கு விதிக்கப்பட்டு இருக்கும் இந்த தடை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.