ஆசிய ஒலிம்பிக் தகவல்
இது குறித்து ஆசிய ஒலிம்பிக் அமைப்பின் கவுரவ துணைத் தலைவர் ரன்திர் சிங் கூறியிருப்பதாவது:2022ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கான முடிவு பொதுக்குழுவில் எடுக்கப்பட்டது. சீனாவின் ஹாங்ஜூ நகரில் கிரிக்கெட் விளையாடப்படும் என்று கூறினார்.
20 ஓவர் போட்டிகள்
2022-ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டு இருப்பதால், பெரும்பாலும் டி20 கிரிக்கெட் விளையாடப்படுவதற்கே அதிகமான வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால், பிசிசிஐ அமைப்பு பல்வேறு நாடுகளுக்கு இந்திய அணியை அனுப்பும் பயணத்திட்டத்தை வைத்துள்ளது. எனவே, இப்போதைக்கு எந்த கருத்தும் தெரிவிக்க இயலாது. தீர ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்று பிசிசிஐ தெரிவித்தது.
தங்கம் வென்ற பாக்.
2014ம் ஆண்டு ஆசிய விளையாட்டில் ஆடவர் பிரிவில் இலங்கையும், மகளிர் பிரிவில் பாகிஸ்தானும் தங்கம் வென்றன. 2010ம் ஆண்டில் வங்க தேசமும், பாகிஸ்தானும் தங்கம் வென்றன.
கோலாலம்பூர் காமன்வெல்த்
1998ம் ஆண்டு காமென்வெல்த் விளையாட்டில் கூட கிரிக்கெட் இடம் பெற்றது. கோலாலம்பூரில் நடந்த காமென்வெல்த் விளையாட்டு போட்டியில் ஷான் போலக் தலைமையிலான தென் ஆப்பிரிக்கா தங்கத்தையும், ஸ்டீவ் வாஹ் தலைமையிலான ஆஸ்திரலிய அணி வெள்ளியும் வென்றன.
மறுத்த பிசிசிஐ
ஆனால், 2014ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு இந்திய அணியை அனுப்ப பிசிசிஐ மறுத்துவிட்டது. அப்போது ஆசிய ஒலிம்பிக் அமைப்பின் தலைவர் ஷேக் அகமது அல் பஹத் அல் சபாப் பிசிசிஐ கடுமையாக விமர்சித்தார்.
கவலை
அவர் கூறுகையில், ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியை பிசிசிஐ அனுப்பாதது வேதனை. இருந்தாலும் அவர்களது முடிவை மதிக்கிறேன்.
பணம் சம்பாதிக்க திட்டம்
ஆனால், பதவியில் இருப்பவர்கள் விளையாட்டை பிரபலப்படுத்த விரும்பவில்லை. வர்த்தகத்தையும், பணம் சம்பாதிக்கவுமே விரும்புகிறார்கள் என நம்புகிறேன். சந்தையையும், விளையாட்டையும் அவர்கள் கட்டுப்படுத்த நினைக்கிறார்கள் என்றார்.
இனிப்பான செய்தி
இத்தனை களேபரங்களுக்கு இடையில்... 2022ம் ஆண்டு சீனாவின் ஹாங்ஜு நகரில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் கிரிக்கெட்டும் சேர்க்கப்பட்டுள்ளது, கிரிக்கெட் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி என்பதை தவிர வேறு என்ன சொல்ல முடியும்.