ஓய்வு ஏன்?
ஏபி டி வில்லியர்ஸ் கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். அப்போது அவருக்கு 35 வயது. அவர் நன்றாகவே கிரிக்கெட் ஆடி வந்தாலும் ஏன் ஓய்வு பெறுகிறார் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. தான் தளர்ந்து போய் விட்டதாகவும், உழைப்பதற்கான சரக்கு தீர்ந்து விட்டதாகவும் அதற்கு காரணம் கூறி இருந்தார்.
ரன் மழை
அதன் பின்பு, ஐபிஎல் உள்ளிட்ட உள்ளூர் டி20 தொடர்களில் பங்கேற்று ரன் மழை பொழிந்து, ஓய்வுக்கு தான் கூறிய காரணத்தை, தானே கேள்விக் குறியாக்கினார். ரசிகர்கள் பலரும் டி வில்லியர்ஸ் மீண்டும் சர்வதேச போட்டிகளில் விளையாட வேண்டும் என தங்கள் விருப்பத்தை கூறி வந்தனர்.
விருப்பம்
2019 உலகக்கோப்பை தொடருக்கான அணியை அறிவிக்க 24 மணி நேரம் இருக்கும் போது, தான் தென்னாப்பிரிக்கா அணியில் மீண்டும் இணைந்து உலகக்கோப்பை தொடரில் விளையாட ஆர்வமாக இருப்பதாக, தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டனும், நண்பருமான பாப் டு ப்ளேசிஸ், தலைமை பயிற்சியாளர் ஓட்டிஸ் கிப்சன் மூலம் தேர்வுக் குழுவுக்கு தகவல் அனுப்பியுள்ளார்.
நிராகரிப்பு
எனினும், அவரது விருப்பதை தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் நிர்வாகம் காது கொடுத்து கேட்கவில்லை என்றும், அவர் அணியில் இணைய வாய்ப்பில்லை என தேர்வுக் குழுவினர் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
ரசிகர்கள் அதிர்ச்சி
தென்னாப்பிரிக்கா தற்போது உலகக்கோப்பை தொடரில் பேட்டிங்கில் மிக மோசமாக தடுமாறி வரும் நிலையில், ஏபி டி வில்லியர்ஸ்-ஐ தென்னாப்பிரிக்கா அணி நிர்வாகம் நிராகரித்தது உலகம் முழுவதும் இருக்கும் "மிஸ்டர் 360" டி வில்லியர்ஸ் ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
இது தவறு
அதே சமயம், சிலர் தென்னாப்பிரிக்கா அணி நிர்வாகம் எடுத்த முடிவு சரியே. மற்ற வீரர்கள் அணியில் தங்கள் இடத்துக்காக தினமும் கிரிக்கெட் ஆடி, போராடி வரும் நிலையில், டி வில்லியர்ஸ் ஒரு ஆண்டு முழுவதும் தென்னாப்பிரிக்கா அணிக்காகவும், தென்னாப்பிரிக்காவின் உள்ளூர் தொடர்களுக்காகவும் விளையாடாமல், டி20 தொடர்களில் மட்டும் ஆடி விட்டு, நேரடியாக உலகக்கோப்பை அணியில் இணைய முடிவு செய்தது தவறு என கூறியுள்ளனர்.