புறக்கணிப்பு
இந்திய அணியில் நீண்ட காலம் கழித்து வாய்ப்பு பெற்ற அம்பதி ராயுடு, உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்யப்படவில்லை. அதன் பின் சில வீரர்களுக்கு காயம் ஏற்பட்ட போதும், ராயுடுவை புறக்கணித்து மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
பின்னணி
இதன் காரணமாக, உலகக்கோப்பை தொடர் நடந்து கொண்டு இருக்கும் போதே, அம்பதி ராயுடு ஓய்வு முடிவை எடுத்துள்ளார். ஆனால், இதன் பின்னணியில் கடந்த ஓராண்டாக நடந்த பல சம்பவங்கள் உள்ளன. எப்படி அம்பதி ராயுடுவை ஒரே ஆண்டில் நம்ப வைத்து கழட்டி விட்டார்கள் என்பது குறித்து ரசிகர்கள் கூறி வருகிறார்கள். அப்படி என்ன நடந்தது?
ஐபிஎல் அளித்த வாய்ப்பு
கடந்த 2018 ஐபிஎல் தொடரில் அம்பதி ராயுடு சிறப்பாக பேட்டிங் செய்து ரன்கள் குவித்தார். இந்திய அணியில் சில ஆண்டுகளாக இடம் கிடைக்காமல் இருந்த ராயுடுவிற்கு அந்த ஐபிஎல் தொடர் கதவுகளை மீண்டும் திறந்து விட்டது.
உடற்தகுதி தடை
அதன் பின் இந்திய அணிக்கு அம்பதி ராயுடு தேர்வு செய்யப்பட்டாலும், உடற்தகுதி தேர்வில் தோல்வி அடைந்தார் என காரணம் கூறி அவரை அணியில் சேர்க்காமல் இருந்தனர். பின்னர், உடற் தகுதி தேர்வில் தேர்ச்சி அடைந்த ராயுடு, அடுத்து ஆசிய கோப்பை தொடர், வெஸ்ட் இண்டீஸ் தொடர்களில் சிறப்பாக செயல்பட்டார்.
கோலி புகழ்ந்தார்
அப்போது அளித்த பேட்டிகளில் கேப்டன் விராட் கோலி மற்றும் ரவி சாஸ்திரி, இந்திய அணியின் நான்காம் வரிசை பேட்ஸ்மேன் அம்பதி ராயுடுதான். அவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என்று கூறினர்.
முதல் தர கிரிக்கெட்டில் ஓய்வு
இவர்கள் பேசியதை உண்மை என்று நம்பிய அம்பதி ராயுடு, இனி நாம் ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளில் மற்றும் கவனம் செலுத்தலாம் என்ற எண்ணத்தில் தன் நீண்ட முதல் தர கிரிக்கெட் பயணத்தை முடித்துக் கொண்டு டெஸ்ட் மற்றும் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தன் ஓய்வை அறிவித்தார்.
பாராட்டை பெற்றார்
அதன் பின் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தொடர்களிலும் ராயுடு சராசரிக்கும் அதிகமான செயல்பாட்டை கொடுத்தார். நியூசிலாந்து தொடரில் ஒரு போட்டியில் 90 ரன்கள் அடித்து அணியை வெற்றி பெறச் செய்து பலரது பாராட்டையும் பெற்றார். இதுவரை உலகக்கோப்பை அணியில் அம்பதி ராயுடு இடம் பெறுவார் என்ற எண்ணமே இருந்தது.
3 போட்டிகளால் நீக்கம்
அடுத்து நடந்த ஆஸ்திரேலிய தொடரில் ராயுடு மூன்று போட்டிகளில் சரியாக விளையாடவில்லை. சொற்ப ரன்களே எடுத்து ஆட்டமிழந்தார். அதை காரணமாக வைத்து, அடுத்த இரண்டு போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை.
ஐபிஎல் தொடரில் சறுக்கல்
கோலி - ரவி சாஸ்திரி தான் இந்த முடிவை எடுத்தார்கள். அப்போது இதை பலரும் கடுமையாக விமர்சித்தனர். திடீர் புறக்கணிப்பால் மனதளவில் சோர்ந்த அம்பதி ராயுடு ஐபிஎல் தொடரில் தன்னை நிரூபிக்க வேண்டும் என்ற அழுத்தத்தில் விளையாடினார். அவரால் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட முடியவில்லை.
வாய்ப்பு இல்லை
அதைத் தொடர்ந்து, அம்பதி ராயுடு பேட்டிங் செய்த இடத்தில் பேட்டிங் செய்ய விஜய் ஷங்கரை தேர்வு செய்தனர். ராயுடு உலகக்கோப்பை அணியில் மாற்று வீரராக காத்திருப்பில் வைக்கப்பட்டார். முதலில் தவான், அடுத்து விஜய் ஷங்கர் இருவரும் காயத்தால் அணியில் இருந்து நீக்கப்பட்டனர். அப்போதும் கோலி - ரவி சாஸ்திரி ராயுடுவுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை.
பட்டியலில் இல்லாத அகர்வால்
தவானுக்கு பதில் மற்றொரு மாற்று வீரர் ரிஷப் பண்ட்டுக்கு வாய்ப்பு கொடுத்தார்கள். அடுத்து விஜய் ஷங்கருக்கு பதில் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்காத மயங்க் அகர்வாலை அணியில் சேர்த்துள்ளது கோலி - ரவி சாஸ்திரி கூட்டணி. அவர் மாற்று வீரர்கள் பட்டியலில் இல்லாத வீரர்.
இவர்கள் தான் காரணம்
நீண்ட போராட்டத்துக்குப் பின், உடற்தகுதி தேர்வு போன்ற சில தடைகளை தாண்டி தான் அணியில் வாய்ப்பு பெற்றார் ராயுடு. துவக்கத்தில் ராயுடுவை புகழ்ந்து பேசி, அவர் நன்றாக ஆடிய போதும், மூன்று போட்டிகளை மட்டும் காரணம் காட்டி, அணியில் இருந்து நீக்கிய விராட் கோலி - ரவி சாஸ்திரி தான் அவரது ஓய்வு அறிவிப்புக்கு முக்கிய காரணம். அவரை கேப்டன் கோலி - பயிற்சியாளர் ரவி சாஸ்திரி நம்ப வைத்து ஏமாற்றி இருக்கிறார்கள் என அவரது ரசிகர்கள் கூறுவதில் தவறு ஏதும் இல்லை!