ஜடேஜாவுக்கு வாய்ப்பில்லை
உலகக்கோப்பை தொடருக்கான உத்தேச அணியில் இடம் பெற்ற ஜடேஜா, இது வரை ஒரு போட்டியில் கூட களமிறங்கவில்லை. சுழற் பந்துவீச்சாளர் என்ற அடையாளத்தோடு மட்டுமே பார்க்கப்படும் அவரால், குல்தீப் யாதவ் - சாஹல் கூட்டணியை தாண்டி அணியில் வாய்ப்பு பெற முடியவில்லை.
சிறந்த பீல்டர்
சுழற் பந்துவீச்சாளர் என்பதோடு ஜடேஜா சிறந்த பீல்டர் ஆவார். இங்கிலாந்து போட்டியில் கூட மாற்று வீரராக சில ஓவர்களுக்கு பீல்டிங் செய்த ஜடேஜா, அற்புதமான கேட்ச் ஒன்றை பிடித்து அசத்தினார்.
ஏன் முக்கியம்?
அது மட்டுமின்றி, பேட்டிங்கில் ஏழாவது, எட்டாவது இடத்தில் இறங்கி அணிக்கு கடைசி நேரத்தில் கை கொடுப்பார். போட்டிகளை தனியாளாக வென்று கொடுக்காவிட்டாலும், மற்ற பேட்ஸ்மேன்களுக்கு ஆதரவாக ஆடுவார். சில திடீர் பவுண்டரிகளை அடித்து அசத்துவார்.
அசாருதீன் ஆதரவு
இப்படி ஒரு ஆல்-ரவுண்டரை இந்தியா நிச்சயம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினார் முன்னாள் கேப்டன் அசாருதீன். வங்கதேச அணிக்கு எதிரான போட்டியிலேயே அவரை பயன்படுத்தி இருக்கலாம். இங்கிலாந்து ஆடுகளங்கள் மந்தமாக இருக்கும் நிலையில், ஜடேஜா சிறப்பாக பேட்டிங் செய்வார் என்று கூறினார்.
ஹர்பஜன் சிங் கருத்து
ஹர்பஜன் சிங் கூறுகையில், ஜடேஜாவை இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இருந்து பயன்படுத்தத் துவங்க வேண்டும். அவர் பந்துவீச்சில் உங்களுக்கு மாற்று வாய்ப்புகளை வழங்குவார். ஒருவேளை யாராவது சரியாக பந்து வீசவில்லை என்றால் ஜடேஜா 6 அல்லது 7 ஓவர்கள் பந்து வீசுவார். மேலும், மிகச் சிறந்த சூழலுக்கு ஏற்ற பேட்ஸ்மேனாக இருப்பார் என்றார்.
இலங்கை போட்டியில் ஜடேஜாவுக்கு வாய்ப்பு கொடுப்பாரா கேப்டன் கோலி?