தோனி ஓய்வா?
தோனி உலகக்கோப்பை தொடருக்கு பின் ஓய்வு பெற திட்டமிட்டுள்ளார் என்ற செய்தி கடந்த வருடமே வலம் வந்தது. அப்போது தோனி பார்ம் அவுட் ஆக இருந்தார். பேட்டிங்கில் மிக மோசமாக செயல்பட்டு வந்தார். இந்த நிலையில், உலகக்கோப்பை தொடருக்கு இடையே தோனி ஓய்வு குறித்து செய்திகள் வெளியாகி உள்ளது.
என்ன காரணம்?
தோனி நடப்பு உலகக்கோப்பை தொடரில் ரன்கள் எடுத்தாலும், நல்ல சராசரி வைத்திருந்தாலும், அவரால் சுழற் பந்துவீச்சிலும், மத்திய ஓவர்களிலும் ரன்கள் எடுக்க முடியவில்லை. தடுமாறி வருகிறார். இதை வைத்தே தோனி ஓய்வு குறித்த செய்திகள் மீண்டும் வலம் வரத் துவங்கி இருக்கிறது.
ராயுடு ஓய்வு
மேலும், இன்று அம்பதி ராயுடு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தன் ஓய்வை அறிவித்துள்ளார். உலகக்கோப்பை அணிக்கான மாற்று வீரர்கள் பட்டியலில் இடம் பெற்று இருக்கும் அவர், இரண்டு வீரர்களுக்கு காயம் ஏற்பட்ட போதும், தன்னை அழைக்கவில்லை என்ற வருத்தத்தில் ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். இதுவும், தோனி ஓய்வு முடிவு குறித்த வதந்திகள் மீண்டும் எட்டி பார்க்க முக்கிய காரணம்.
நண்பர் என்ன சொன்னார்?
இந்த வதந்தி குறித்து பேசிய தோனியின் நண்பரும், மேலாளருமான அருண் பாண்டே, இது அனைத்தும் ஊக அடிப்படையில் வெளியாகும் செய்தி மட்டுமே என்று கூறி தோனி ரசிகர்களை சாந்தப்படுத்தி இருக்கிறார்.
நீடிக்கும் மர்மம்
தோனி டெஸ்ட் போட்டி ஓய்வு முடிவை திடீரென ஒரு தொடருக்கு நடுவே தான் அறிவித்தார். அதே போல, ஒருநாள் போட்டிகள் கேப்டன் பதவியில் இருந்து அவர் விலகியதும் திடீர் செய்தியாகவே அமைந்தது. அது போல, ஒருநாள் போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு பெறுவதும் யாரும் எதிர்பாராத ஒரு சந்தர்ப்பத்தில் இருக்கலாம்.