கடைசி வரை நின்றார்
இந்தப் போட்டியில் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியில் மூன்று பேட்ஸ்மேன்கள் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எட்டினர். துவக்க வீரராக களமிறங்கிய கேப்டன் கருணாரத்னே கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று 52 ரன்கள் குவித்தார்.
பேட்டிங் சரிவு
குசால் பெரேரா 29, திசாரா பெரேரா 27 ரன்கள் எடுத்து அவருக்கு ஒத்துழைப்பு அளித்தனர். மற்ற பேட்ஸ்மேன்கள் வருவதும், போவதுமாக இருந்தார்கள். இலங்கை அணி 29.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப் பிடித்து 136 ரன்கள் மட்டுமே எடுத்தது. நியூசிலாந்து அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
முக்கிய சாதனை
இலங்கை கேப்டன் டிமுத் கருணாரத்னே துவக்க வீரராக களமிறங்கி கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்றது உலகக்கோப்பை தொடரில் முக்கிய சாதனையாக மாறி உள்ளது. உலகக்கோப்பை தொடரில் துவக்க வீரராக களமிறங்கி கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்ற இரண்டாவது வீரர் என்ற சாதனையை செய்துள்ளார் கருணாரத்னே.
ஒரே ஒருவர் யார்?
கருணாரத்னேவுக்கு முன் இதுவரை ஒரே ஒரு வீரர் மட்டுமே அந்த உலகக்கோப்பை தொடரில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்றுள்ளார். 1999 உலகக்கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரைட்லி ஜேக்கப்ஸ், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று 49 ரன்கள் குவித்தார். 20 ஆண்டுகள் கழித்து அதே சாதனையை மீண்டும் செய்துள்ளார் இலங்கை கேப்டன்.
உலகளவில் சாதனை
உலகளவில், ஒட்டுமொத்த ஒருநாள் போட்டிகள் வரலாற்றில் இதே சாதனையை செய்யும் 12வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் டிமுத் கருணாரத்னே. துவக்க வீரர்கள் மட்டுமே செய்ய முடியும் இந்த சாதனையை இதுவரை ஒரு இந்திய துவக்க வீரர் கூட செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிய அணிகள்
பாகிஸ்தான், அணியை தொடர்ந்து இலங்கை அணியும் வேகப் பந்துவீச்சை கண்டு மிரண்டது. தொடர்ந்து ஆசிய அணிகள் 2019 உலகக்கோப்பை தொடரில் திணறி வருவது குறிப்பிடத்தக்கது.