ரவி சாஸ்திரி எப்போது வந்தார்?
2015 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதியோடு தோல்வி அடைந்து வெளியேறிய போது அணியின் இயக்குனர் என்ற பதவியில் அமர்த்தப்பட்டார் ரவி சாஸ்திரி. அப்போது அணியில் சில மாற்றங்களை செய்தார். அதில் குறிப்பிடத்தக்க ஒன்று - அணியில் விராட் கோலியின் அசுர வளர்ச்சி.
அனில் கும்ப்ளே நீக்கம்
அனில் கும்ப்ளே பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு இந்தியா சிறப்பாக் ஆடி வந்தது. சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிப் போட்டியில் இந்தியா மோசமாக தோல்வி அடைந்தது. அப்போது அனில் கும்ப்ளே - விராட் கோலி இடையே பெரிய விரிசல் விழுந்து, பயிற்சியாளரை கேப்டன் நீக்க வைத்த அதிர்ச்சி சம்பவம் இந்திய கிரிக்கெட்டில் நடந்தேறியது. அப்போது கோலி பிடிவாதமாக ரவி சாஸ்திரியை பயிற்சியாளராக தேர்வு செய்ய செய்தார்.
மிடில் ஆர்டர் சிக்கல்
அப்போது இந்திய ஒருநாள் போட்டிகள் அணியில் இருந்த சிக்கல் மிடில் ஆர்டர். தோனி தவிர்த்து எந்த வீரரும் மிடில் ஆர்டரில் நிலையாக இடம் பெறவில்லை. ரவி சாஸ்திரி பயிற்சியாளராக அதற்கு எடுத்த முயற்சிகள் குட்டையைக் குழப்பின.
நீடித்த குழப்பம்
யுவராஜ் சிங், அஜின்க்யா ரஹானே, மனிஷ் பாண்டே, சுரேஷ் ரெய்னா, தினேஷ் கார்த்திக், அம்பதி ராயுடு, ஸ்ரேயாஸ் அய்யர் என பல பேட்ஸ்மேன்கள் நான்காம் வரிசையில் பேட்டிங் செய்ய மட்டுமே தேர்வு செய்யப்பட்டு பின் நீக்கப்பட்டனர்.
தவறான முடிவுகள்
இந்தியாவில் மிடில் ஆர்டரில் சரியாக விளையாட பேட்ஸ்மேன்களே இல்லையா? அல்லது ரவி சாஸ்திரி - கோலிக்கு என்ன தான் பிரச்சனை? ஏன் வீரர்களை மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள் என பலரும் கேள்வி எழுப்பினர்.
தோனி புறக்கணிப்பு
கங்குலி, அனில் கும்ப்ளே உள்ளிட்டோர் தோனியை நான்காம் வரிசையில் பேட்டிங் செய்ய வைத்து பார்க்கலாம் என பல முறை கூறியும், அவருக்கு நிரந்தரமாக ஒரு இடத்தில் இறங்க வாய்ப்பு வழங்கப்படவில்லை. ரவி சாஸ்திரி பயிற்சியாளராக வந்த பின் பேட்டிங்கில் தோனிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டாலும், அவருக்கு ஏற்ற இடத்தில் வழங்காமல் புறக்கணிக்கப்பட்டார் என்றும் கூறலாம்.
அரையிறுதியில் எடுத்த முடிவு
ரவி சாஸ்திரி ஒவ்வொரு தொடரிலும் எடுத்த சொதப்பல் முடிவுகள் பற்றி பேசினால் ஒரு நாள் கூட போதாது. எனினும், இந்தியா அதை மீறி வெற்றிகளை குவித்து வந்ததால் அவர் தப்பி வந்தார். உலகக்கோப்பை அரையிறுதி தோல்வியில் அவர் சிக்கிக் கொண்டார். இப்போது பிசிசிஐ மட்டும் இல்லை.. ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் அவர் பதில் சொல்ல வேண்டிய நிலையில் இருக்கிறார்.
தோனி எங்கே?
உலகக்கோப்பை அரையிறுதியில் மிடில் ஆர்டர் பேட்டிங் வரிசையில் தன் இஷ்டத்திற்கு அவர் மாறுதல்கள் செய்ததாக கூறப்படுகிறது. விக்கெட்கள் சரிந்த போது அனுபவ வீரர் தோனியை முன்னே அனுப்பி விக்கெட் வீழ்ச்சியை தடுக்காமல், அதிரடி வீரர்களான ரிஷப் பண்ட், ஹர்திக் பண்டியா மற்றும் பினிஷர் என அடையாளம் காணப்படும் தினேஷ் கார்த்திக்கை அவருக்கு முன்னே அனுப்பி வைத்தார் ரவி சாஸ்திரி. இதில் கோலியின் பங்கும் உள்ளது.
மாற்றம் தேவை
இதனால், ரசிகர்கள் ரவி சாஸ்திரி மேல் மிகவும் கோபத்தில் இருக்கிறார்கள். 2015இல் உலகக்கோப்பை அரையிறுதி தோல்வியுடன், இந்திய அணிக்கு வந்த அவர், 2019 உலகக்கோப்பை அரையிறுதி தோல்வியோடு அணியை விட்டு செல்வதே நல்லது என்கிறார்கள் ரசிகர்கள்.
என்ன செய்தார்?
அவர் இருந்த இந்த இரண்டு ஆண்டுகளில் மிடில் ஆர்டரில் எந்த மாற்றத்தையும் அவர் செய்யவில்லை. அவர் "பயிற்சியாளர்" என்பதற்கு அடையாளமாக என்ன பயிற்சி கொடுத்தார் என சாதாரண கிரிக்கெட் ரசிகன் கேட்கும் கேள்விக்கு பிசிசிஐயால் கூட பதில் சொல்ல முடியாது. சீக்கிரம் புதிய பயிற்சியாளரை நியமிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் வேண்டுகோள்