பிரிஸ்டல்: 2019 உலகக்கோப்பை தொடரில் மழையால் போட்டிகள் பாதிக்கப்பட்டு வருவது ரசிகர்களை கடும் அதிருப்தியில் ஆழ்த்தி இருக்கிறது.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 2019 உலகக்கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இந்த முறை ரவுண்டு ராபின் முறையில் ஏராளமான போட்டிகளுடன் பிரம்மாண்டமான தொடராக நடத்தப்பட திட்டமிட்டு இருந்தது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி).

அதற்கேற்ப அனைத்து ஏற்பாடுகளும் கச்சிதமாக முடிந்த நிலையில், முதல் சில போட்டிகள் மட்டுமே எந்த தடங்கலும் இன்றி நடைபெற்றது.
அதன் பின் நடந்த லீக் போட்டிகளில் மழை குறுக்கிட்டது. முதலில் இலங்கை - ஆப்கானிஸ்தான் இடையே ஆன போட்டியில் மழை குறுக்கிட்டது. எனினும், அந்த போட்டியில் ஓவர்கள் குறைக்கப்பட்டு போட்டி முழுமையாக நடைபெற்றது.
அடுத்து கடும் மழையால், இலங்கை - பாகிஸ்தான் மற்றும் இலங்கை - வங்கதேசம் போட்டிகள் முற்றிலுமாக டாஸ் போடாமல், ஒரு பந்து கூட வீசாமல் கைவிடப்பட்டது. தென்னாப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் போட்டி 7.3 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் மழையால் கைவிடப்பட்டது.
இதனால், அணிகளும், ரசிகர்களும் பெரும் ஏமாற்றத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள். ஓவர்கள் குறைக்கப்பட்டு போட்டிகள் நடந்தால், அணிகளுக்கு கடினமானதாக இருந்தாலும், ரசிகர்களுக்கு அது விருந்தாக அமையும். அதற்கும் வாய்ப்பு இல்லாமல், போட்டிகள் முழுமையாக கைவிடப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
உலகக்கோப்பை போட்டிகளைஅதிகம் பார்ப்பது இந்திய ரசிகர்கள் தான். இதுவரை இந்தியா ஆடிய 2 போட்டிகளில் மழை வரவில்லை. எனினும், இந்தியா அடுத்து நியூசிலாந்து அணிக்கு எதிராக ஆடவுள்ள போட்டியில் மழை வரக்கூடும் என வானிலை அறிக்கை மூலம் கணிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து அணிக்கு அடுத்து பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி ஆடவுள்ள, முக்கியமான போட்டியிலும் மழை வரலாம் என வானிலை அறிக்கைகள் கூறுகின்றன. இதனால், ரசிகர்கள் கடும் விரக்தியில் இருக்கிறார்கள்.
அதிக போட்டிகள் கொண்ட இந்த உலகக்கோப்பை தொடரில் இதுவரை நடந்த 16 போட்டிகளில் 3 போட்டிகள் கைவிடப்பட்டு இருக்கும் நிலையில், இன்னும் எத்தனை போட்டிகள் கைவிடப்பட உள்ளதோ?