எலும்பு முறிவு
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் தவான் சதம் அடித்தார். ஆனால், அதே சமயம் அந்தப் போட்டியில் காயமும் அடைந்தார். அவரது இடது கை பெரு விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டு, உலகக்கோப்பை தொடரில் அடுத்த மூன்று வாரத்திற்கு அணியில் இடம் பெறும் வாய்ப்பை இழந்தார் தவான்.
அடுத்தது யார்?
இந்த நிலையில், காயமடைந்த வீரர்களுக்கு மாற்று வீரர்களை தேர்வு செய்ய முடியும் என்பதால், இந்திய அணியில் தவானுக்கு மாற்றாக யார் இடம் பெறப் போகிறார்கள் என்ற விவாதம் எழுந்துள்ளது.
ஹர்பஜன் சொன்ன வீரர்?
மாற்று வீரர்களாக பலரும் ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர், அம்பதி ராயுடு என கூறி வரும் நிலையில், ஹர்பஜன் சிங் புதிதாக ஒருவரை கூறி உள்ளார். அவர் வேறு யாருமல்ல அஜின்கியா ரஹானே. ஹர்பஜன் சிங் கூறும் போது, நடுவே விஜய் ஷங்கர் காலையும் வாரி விட்டார்.
ராகுல் துவக்கம்
தற்போது மிடில் ஆர்டரில் ஆடி வரும் துவக்க வீரர் ராகுலை மீண்டும் துவக்க வீரராக களமிறக்கலாம். அதனால், மிடில் ஆர்டரில் ஏற்படும் இடைவெளிக்கு ரிஷப் பண்ட்டை தேர்வு செய்யலாம். ஆனால், ரிஷப் பண்ட் இளம் வீரர். அனுபவம் குறைவு.
விஜய் ஷங்கர் சரி வராது
ஒருவேளை ஏற்கனவே அணியில் இருக்கும் விஜய் ஷங்கரை மிடில் ஆர்டரில் ஆட வைத்தால், அது சரியான முடிவாக இருக்காது என விமர்சனம் செய்தார் ஹர்பஜன் சிங். அதற்கு பதில் அனுபவ வீரரான அஜின்கியா ரஹானேவை அணியில் சேர்த்து மிடில் ஆர்டரில் இறக்கலாம் என கூறி இருக்கிறார் ஹர்பஜன் சிங்.
ரஹானேவின் பார்ம்
ரஹானே தற்போது இங்கிலாந்தில் தான் இருக்கிறார். அங்கே அவர் கவுன்டி அணியில் சேர்ந்து உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடர் முதல் நல்ல பார்மிலும் இருக்கிறார் ரஹானே. விஜய் ஷங்கர் தனக்கு கடைசியாக கிடைத்த சில வாய்ப்புகளில் சொதப்பி இருக்கிறார். ரிஷப் பண்ட் சில சமயம் பொறுப்பற்ற ஷாட் ஆடி விக்கெட்டை தூக்கி கொடுத்து விடுகிறார்.
நல்ல டெக்னிக் உள்ளது
இந்த நிலையில், அணிக்கு பொறுப்பாக ஆடக் கூடியவர் ரஹானே தான். அவருக்கு அனுபவமும் இருக்கிறது. நல்ல டெக்னிக்கும் இருக்கிறது என்கிறார் ஹர்பஜன் சிங். ஹர்பஜன் சிங் இப்படி கூறினாலும், ரிஷப் பண்ட் நாளை இங்கிலாந்து கிளம்ப உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.