அணியில் விஜய் ஷங்கர்
தவான் காயமடைந்த நிலையில் அவருக்கு பதில் அணியில் இடம் பெற்றார் விஜய் ஷங்கர். பாகிஸ்தான் போட்டியில் அவர் மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்தார். பேட்டிங்கை விட அவரது பந்துவீச்சு அந்தப் போட்டியில் சிறப்பாக இருந்தது.
விஜய் ஷங்கர் காயம்
இந்த நிலையில், விஜய் ஷங்கர் தொடர்ந்து அணியில் இடம் பெற்று போட்டிகளில் பங்கேற்பார் என கூறப்பட்டது. ஆனால், வலைப் பயிற்சியின் போது அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. பயிற்சியில் பும்ரா வீசிய யார்க்கர் பந்தில் விஜய் காயமடைந்ததாக கூறப்பட்டது. எனினும், அவர் நன்றாகவே இருக்கிறார். பயப்படும்படி ஒன்றும் இல்லை என்று இந்திய அணி வட்டாரத்தில் கூறப்பட்டது.
ரிஷப் பண்ட் ஆடுவாரா?
இந்த நிலையில், தவானுக்கு மாற்று வீரராக உத்தேச வீரர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்ட ரிஷப் பண்ட், அடுத்து இந்தியா ஆடவுள்ள ஆப்கானிஸ்தான் போட்டியில் விளையாடுவார் என கூறப்பட்டுள்ளது. விஜய் ஷங்கரின் காயம் பெரிதானது இல்லை என்றாலும், அவருக்கு ஒரு போட்டியில் ஓய்வு கொடுக்க முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ஹர்பஜன் சிங் இந்த முடிவை எதிர்த்துள்ளார்.
ஹர்பஜன் சிங் கருத்து
ஹர்பஜன் சிங் கூறுகையில், நிச்சயம் ரிஷப் பண்ட்டை விட விஜய் ஷங்கர் தான் அணியில் இடம் பெற வேண்டும். அவர் முந்தைய போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டார் என்றார்.
விமர்சனம்
ஒருவர் அணியில் புதிதாக வந்துள்ளார் என்பதற்காக அவருக்கு இவர் இடத்தை தூக்கி கொடுக்கக் கூடாது என்று கூறி, ரிஷப் பண்ட்டுக்கு அணியில் இடம் கொடுப்பதை கடுமையாக விமர்சித்தார் ஹர்பஜன் சிங்.
ஷமி உள்ளே
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றம் மட்டுமே செய்ய வேண்டும். காயமடைந்த புவனேஸ்வர் குமாருக்கு பதில் முகமது ஷமியை அணியில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்றார் ஹர்பஜன் சிங்.