பகை
இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள், கிரிக்கெட் என்ற வரைமுறையை தாண்டி சுமார் 70 ஆண்டுகளாக இரு நாடுகளிடையே வளர்ந்து வரும் பிரிவினைப் பகையின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. இந்தியா - பாகிஸ்தான் இடையே அரசியல் ரீதியாக, ராணுவ ரீதியாக என்ன பிரச்சனை ஏற்பட்டாலும், இரு நாடுகள் இடையே ஆன கிரிக்கெட் போட்டி தடைபடுவது வாடிக்கையான ஒன்றாக இருக்கிறது.
ஐசிசி தொடர்கள்
கடந்த 2013க்குப் பின் இந்தியா - பாகிஸ்தான் இருதரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெறவில்லை. இரு நாடுகளும் ஐசிசி நடத்தும் தொடர்களான சாம்பியன்ஸ் ட்ராபி, ஆசிய கோப்பை, உலகக்கோப்பை போன்ற தொடர்களில் மட்டுமே சந்தித்து வருகின்றன.
நீண்ட கால இடைவெளி
இதனால், இந்தியா - பாகிஸ்தான் போட்டிகளுக்கு இடையே நீண்ட கால இடைவெளி ஏற்படுகிறது, மேலும், ஐசிசி தொடர்களிலும், ஒரு போட்டியில் மட்டுமே மோதும் வாய்ப்பு கிடைக்கிறது. அதனால், ரசிகர்கள் இடையே இந்தியா - பாகிஸ்தான் போட்டிகளுக்கு ஆர்வம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இரண்டு மடங்கு வருவாய்
அது தான் இந்தப் போட்டியை ஒளிபரப்பும் தொலைக்காட்சிக்கு இரண்டு மடங்கு விளம்பர வருவாயை ஈட்டித் தரப் போகிறது. இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் உலகக்கோப்பை தொடரை ஒளிபரப்பி வருகிறது. இதில் இந்தியா ஆடாத போட்டிகளுக்கு விளம்பர வருவாயாக 5-7 கோடி வரை கிடைக்கும்.
விளம்பர வருவாய் அதிகம்
இந்தியா ஆடும் போட்டிகளுக்கு (பாகிஸ்தான் போட்டி தவிர்த்து), 65 முதல் 75 கோடி வரை வருவாய் கிடைக்கும். இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு விளம்பர வருவாய் மட்டும் 138 கோடிக்கும் மேல் கிடைக்கும் என கூறப்படுகிறது. எப்படி?
விளம்பர கணக்கு
பாகிஸ்தான் ஆடாத மற்ற இந்திய போட்டிகளின் 10 வினாடி விளம்பரத்துக்கு 16 முதல் 18 லட்சம் வரை வருவாய் கிடைக்கும். அதே சமயம், இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு 10 வினாடிக்கு 25 லட்சம் என தொகை நிர்ணயிக்கப் பட்டுள்ளது. ஒரு வினாடிக்கு 2.5 லட்சம்!
பல மடங்கு விலை
ஏற்கனவே, உலகக்கோப்பை தொடருக்கு இருக்கும் ஸ்பான்சர்களுக்கும், பல நாட்களுக்கு முன்பே விற்கப்பட்ட விளம்பர ஸ்லாட்டுகளுக்கும் தான் இந்த விலை. இன்னும் கடைசி நேரத்தில் விற்பதற்காக மீதமுள்ள ஸ்லாட்டுகளுக்கு போட்டியின் அடிப்படையில் பல மடங்கு விலை நிர்ணயிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. (இந்த தகவல்கள் செய்திகளின் அடிப்படையிலான ஊகம் மட்டுமே).
நஷ்டம் தான்
அதன்படி, பார்த்தால் இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு சுமார் 137 கோடிக்கும் மேல் வருவாய் கிடைக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. ஆனால், விளம்பரதாரர்களுக்கு இந்தப் போட்டியில் விளம்பரம் செய்வது லாபகரமான ஒன்றாக இருக்காது என்கிறார்கள் விளம்பர ஏஜென்சிகள்.
விற்பனையில் பிரதிபலிக்காது
அதற்கு காரணம், அதிகப்படியான விளம்பர தொகை. இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் பல கோடிக்கு விளம்பரம் செய்வது, அவர்களின் விற்பனையில் நேரடியாக பிரதிபலிக்காது என்கிறார்கள்.