டிக்கெட் விற்பனை
இந்திய ரசிகர்கள் பலரும் இந்தியா இறுதிப் போட்டி வரை முன்னேறும் என்ற எதிர்பார்ப்பில் உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு கடந்த மாதத்துக்கு முன்பே முன்பதிவு செய்து விட்டனர். இறுதிப் போட்டிக்கான ஒட்டு மொத்த டிக்கெட்களில் பெரும்பாலான டிக்கெட்கள் இந்தியர்கள் வசம் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தியா தோல்வி
இந்த நிலையில், அரையிறுதி வரை முன்னேறியது இந்தியா. அரையிறுதியில் நியூசிலாந்து அணியிடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து அதிர்ச்சி அளித்தது. இதனால் இந்திய ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
அங்கேயே இருக்கும் ரசிகர்கள்
இந்தியா விளையாடும் போட்டிகளை நேரில் காண இங்கிலாந்து சென்ற ரசிகர்களில், இறுதிப் போட்டிக்கு டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் இன்னும் இங்கிலாந்து நாட்டிலேயே முகாமிட்டு இருக்கிறார்கள். இது ஒரு வகையில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இங்கிலாந்து - நியூசிலாந்து ரசிகர்களுக்கு பாதிப்பாக அமைந்துள்ளது.
இங்கிலாந்து ரசிகர்கள்
குறிப்பாக இங்கிலாந்து நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் பலர் தங்கள் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள நிலையில், இறுதிப் போட்டியை காண ஆவலாக உள்ளனர். எனினும், அவர்களுக்கு டிக்கெட்கள் கிடைக்கவில்லை.
ஐசிசி திட்டம் தோல்வி
ஐசிசி, டிக்கெட் வாங்கிய பிற நாட்டு ரசிகர்கள் மறுவிற்பனை மூலம் தங்கள் டிக்கெட்களை விற்றுக் கொள்ளலாம் என அதற்கான இணைய சேவை குறித்து அறிவித்துள்ளது. அதிலும், இந்திய ரசிகர்கள் தங்கள் டிக்கெட்களை விற்க முன் வரவில்லை.
என்ன நடக்கும்?
இதனால், உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய ரசிகர்கள் தான் அதிகம் ஆக்கிரமிக்கப் போகிறார்கள் என்கிறார்கள். நியூசிலாந்து அணி, அரையிறுதியில் இந்தியாவை வீழ்த்தியதால், இறுதிப் போட்டியில் இங்கிலாந்து நாட்டை தான் இந்திய ரசிகர்கள் ஆதரிப்பார்கள் எனவும் கூறப்படுகிறது.