விஜய் ஷங்கர் நீக்கம்
விஜய் ஷங்கருக்கு பாகிஸ்தான் போட்டிக்கு பின் பயிற்சியின் போது பும்ரா வீசிய பந்தில் கால் விரல் பகுதியில் காயமடைந்தார். அதன் பின் போட்டிகளில் பங்கேற்று வந்தார். இந்த நிலையில் அவர் மீண்டும் பயிற்சியின் போது கால் விரல் பகுதியில் அதே பும்ரா வீசிய பந்தால் காயமடைந்தார் என கூறப்படுகிறது.
செய்தி வரவில்லை
அவர் இங்கிலாந்து போட்டிக்கு முன்பே பயிற்சியில் காயமடைந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அது குறித்து எந்த செய்தியும் அப்போது வரவில்லை. இங்கிலாந்து போட்டிக்கு முன் திடீரென விஜய் ஷங்கருக்கு காயம். அதனால், ரிஷப் பண்ட் அணியில் ஆடவுள்ளார் என்றார் கோலி.
சரியாக ஆடவில்லை
எல்லோரும் விஜய் ஷங்கருக்கு பெரிய காயம் எல்லாம் இருக்காது, அவர் சரியாக விளையாடாத காரணத்தால் அணியில் சேர்க்கப்படவில்லை என்றே நினைத்தார்கள். ஆனால், அதே காயத்தை காரணமாக காட்டி அணியில் இருந்தே நீக்கி இருக்கிறார்கள்.
ரோஹித் சர்மா பேட்டி
இங்கிலாந்து போட்டிக்குப் பின் பேட்டி அளித்த துணை கேப்டன் ரோஹித் சர்மா, எங்கள் அணியில் விஜய் ஷங்கர் தான் நான்காம் வரிசை பேட்ஸ்மேன். அவருக்கு காயம் என்பதால் தான் ரிஷப் பண்ட் அணியில் சேர்க்கப்பட்டார். விஜய் ஷங்கர் மீண்ட பின் அணியில் களமிறங்குவார் என்றார்.
அணியில் குழப்பம்
அதற்கு அடுத்த நாள் விஜய் ஷங்கரை திடீரென நீக்கி விட்டு, துவக்க வீரரான மயங்க் அகர்வாலை அணியில் சேர்த்துள்ளார்கள். இதனால் இந்திய அணியில் குழப்பம் நிலவுகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அணியில் கேப்டன் கோலி - ரவி சாஸ்திரி தங்கள் போக்கில் நிறைய மாற்றங்களை செய்து வருவதாக தெரிகிறது.
இரு குழுக்கள்
இந்திய அணியில் நடந்து வரும் நிகழ்வுகளை பார்க்கும் போதும், தோனி, ஜாதவ் உள்ளிட்டோரின் நிதான பேட்டிங், ரோஹித் சர்மா சொல்லும் தகவல்களுக்கு மாறாக அணியில் எடுக்கப்படும் முடிவுகள், தவான் காயமடைந்த போது தேர்வுக் குழுவுக்கும், அணிக்கும் ஏற்பட்ட உரசல், விஜய் ஷங்கரின் திடீர் நீக்கம் - இதையெல்லாம் பார்க்கும் போது அணிக்குள் பிளவுகள் இருக்கலாம் என தோன்றுகிறது. வழக்கமாக கிரிக்கெட் அணிகளில் தோன்றும் குழுக்கள் முறை இந்திய அணியில் இப்போது முளைத்துள்ளதோ என்ற சந்தேகம் வருகிறது.