சௌதாம்ப்டன் : இந்திய அணியில் காயத்தில் இருந்த கேதார் ஜாதவ், அதில் இருந்து மீண்டு உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சியில் ஈடுபட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதனால், இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
கேதார் ஜாதவ் 2019 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்று இருந்தார். அவருக்கு ஐபிஎல் தொடரில் காயம் ஏற்பட்டது.

காயத்தோடு உலகக்கோப்பை தொடரில் விளையாட இங்கிலாந்து கிளம்பி வந்தார் கேதார் ஜாதவ். இதனால், இந்திய அணியில் அவர் விளையாடுவாரா? மாட்டாரா? என்ற சந்தேகம் இருந்து வந்தது.
இந்த நிலையில் உலகக்கோப்பை தொடருக்கான வலைப் பயிற்சியில் ஈடுபட்டார் கேதார் ஜாதவ். இரண்டு முறை முழுமையான பயிற்சியில் கேதார் ஜாதவ் ஈடுபட்டார் என இந்திய அணி வட்டாரத்தில் இருந்து செய்திகள் வெளியாகி உள்ளது.
இதனால், இந்திய அணி நிர்வாகம் நிம்மதி அடைந்துள்ளது. இந்திய உத்தேச அணியில் உள்ள 15 வீரர்களும் உடற்தகுதியோடு உள்ளனர் என்பது நல்ல செய்தி தான். ஆனால், இப்போது கேதார் ஜாதவ் முன்பு திட்டமிட்டது போல, இந்திய அணியில் களமிறங்குவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கேதார் ஜாதவ் உலகக்கோப்பை தொடருக்கு முன் நடந்த இரண்டு பயிற்சிப் போட்டிகளிலும் விளையாடவில்லை. அவருக்கு பதில் விஜய் ஷங்கர், தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட வீரர்களே அணியில் இடம் பெற்றனர்.
ஒருவேளை கேதார் ஜாதவ் ஆடாத பட்சத்தில் தினேஷ் கார்த்திக் தான் அணியில் இடம் பெறுவார் என்ற நிலை இருந்தது. ஆனால், தற்போது கேதார் ஜாதவ் காயத்தில் இருந்து மீண்டாலும் இந்திய அணியின் முதல் உலகக்கோப்பை லீக் போட்டியில் பங்கேற்பாரா? அல்லது அந்தப் போட்டியில் அவர் வெளியே அமர வைக்கப்படுவாரா? என்ற சந்தேகம் நிலவுகிறது.
கேதார் ஜாதவ் ஆல்-ரவுண்டர் என்ற அடையாளத்துடன் தான் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார். அவர் தன் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் பந்து வீசவில்லை. பின்னர் பேட்டிங்கும் செய்ய முடியாத அளவு காயம் பெரிதானது.
தற்போது காயத்தில் இருந்து மீண்டாலும், அவரால் பந்து வீச முடியுமா? என்பது தெளிவாக தெரியவில்லை. ஒருவேளை அவரால் பந்து வீச முடியாத நிலை இருந்தால், அவருக்கு அணியில் வாய்ப்பு கிடைப்பது சிரமம் தான். அவருக்கு பதில் தினேஷ் கார்த்திக் அணியில் இடம் பெறுவார்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா ஆடும் முதல் லீக் போட்டி ஜூன் 5 அன்று நடைபெற உள்ளது. அதற்குள் கேதார் ஜாதவ் நிலை குறித்து என்ன முடிவு எடுக்கப்படும் என பார்க்கலாம்.