இந்திய அணியில் வருடக்கணக்கில் தொடரும் குழப்பம்.. கோலி, ரவி சாஸ்திரி செய்த தவறு தான் காரணம்!
Recommended Video
மும்பை : 2019 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதிச் சுற்றுடன் வெளியேறியது.
இந்திய அணி மீது பலரும் விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். அதில் குறிப்பாக பலரும் சொல்லும் ஒரு குறைபாடு, மிடில் ஆர்டர் தான்.
இந்திய அணியின் மிடில் ஆர்டர் கடந்த சில ஆண்டுகளாகவே பலவீனமாகவே இருந்து வந்துள்ளது. இதற்கு கேப்டன் விராட் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தான் காரணம்.

மிடில் ஆர்டர் குளறுபடி
இந்திய அணியில் கடந்த சில ஆண்டுகளாகவே நான்காம் வரிசையில் பேட்டிங் செய்ய சரியான வீரர் இல்லாமல் பல வீரர்களுக்கு வாய்ப்பு அளித்து பார்க்கப்பட்டது. யுவராஜ் சிங் தொடங்கி ரஹானே, ஸ்ரேயாஸ் ஐயர், தினேஷ் கார்த்திக், மனிஷ் பாண்டே என பல வீரர்கள் பயன்படுத்தி பார்க்கப்பட்டனர். இதனால், நிலையான வீரர்கள் இல்லாமல் இந்திய அணியின் மிடில் ஆர்டர் மிகவும் பலவீனமாக இருந்தது.

அம்பதி ராயுடு நிலை
இந்த நிலையில் அம்பதி ராயுடு உலகக்கோப்பைக்கு சில மாதங்கள் முன்பு வரை நான்காம் வரிசையில் சிறப்பாக பேட்டிங் செய்து வந்தார். உலகக்கோப்பை அணியில் அவர் இடம் பெறுவார் என அனைவரும் எதிர்பார்த்தனர்.

ஓய்வு பெற்றார்
ஆனால், ஆஸ்திரேலிய தொடரில் மூன்று போட்டிகளில் அவர் சரியாக ஆடவில்லை என்பதை காரணமாக வைத்து அவரை அணியில் இருந்து நீக்கினார்கள். உலகக்கோப்பை தொடரில் இரு வீரர்கள் காயமடைந்தும், மாற்று வீரரான தன்னை அழைக்கவில்லை என்பதால் மனமுடைந்த அம்பதி ராயுடு கிரிக்கெட்டில் இருந்தே ஓய்வு பெற்றார்.

உருவாக்கி இருக்க வேண்டும்
நான்காம் வரிசையில் பேட்டிங் செய்ய கேப்டன் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி யாரேனும் ஒருவரை உருவாக்கி இருக்க வேண்டும். அவர்களுக்கு நீண்ட கால அவகாசம் இருந்தது. நான்காம் வரிசையில் ஒரே வீரருக்கு தொடர்ந்து வாய்ப்பு அளித்து இருக்க வேண்டும். ஆனால், ஒவ்வொரு தொடருக்கும் ஒரு வீரர் என மாற்றிக் கொண்டே இருந்தார்கள்.

தொடர்ந்து மாற்றம்
உலகக்கோப்பை தொடரின் துவக்கத்தில் ராகுல் தான் அந்த இடத்தில் பேட்டிங் செய்வார் என்றார்கள். ஆனால், அவர் நான்காம் வரிசையில் ஒரீரு போட்டிகளில் ஆடிய நிலையில், தவான் காயமடைந்ததால், துவக்க வீரராக மாறினார். அடுத்து விஜய் ஷங்கரை களமிறக்கினார்கள். அவரும் சரி வரவில்லை. இறுதியாக ரிஷப் பண்ட்டை நான்கு போட்டிகளில் களமிறக்கினார்கள்.

உலகக்கோப்பையில் பாதிப்பு
இத்தனை வீரர்களை மாற்றுவதற்கு பதில், ஆஸ்திரேலிய தொடருக்கு முன்பு வரை சிறப்பாக ஆடிய அம்பதி ராயுடுவை அணியில் சேர்த்திருக்கலாம் அல்லது ரிஷப் பண்ட்டை கடந்த ஆண்டில் இருந்தே அணியில் தொடர்ந்து ஆட வைத்து இருக்கலாம். ஏன் வீரர்களை தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருந்தார்கள் என்பதே பலரின் கேள்வி. இது தான் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை பாதித்தது.


Click it and Unblock the Notifications