மும்பை: 2019 உலகக்கோப்பை தொடரை இந்திய அளவில் தொலைக்காட்சியில் எத்தனை மக்கள் பார்வையிட்டார்கள் என்ற புள்ளிவிவரம் வெளியாகி வாயை பிளக்க வைத்துள்ளது.
2019 உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் கடந்த மே 30 முதல் நடைபெற்று வருகிறது.

இந்த தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. அந்த முதல் போட்டியின் பார்வையாளர்கள் குறித்த புள்ளிவிவரம் தான் இப்போது வெளியாகி இருக்கிறது.
இந்த உலகக்கோப்பை தொடர் ரவுண்டு ராபின் முறையில் பத்து அணிகள், ஒவ்வொன்றாக மற்ற அணிகளோடு மோதும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த விறுவிறுப்பான லீக் சுற்றை அதிக மக்கள் பார்ப்பார்கள் என கருதப்பட்டது.
முதல் போட்டியில் தொடரை நடத்தும் இங்கிலாந்து அணியும், தென்னாப்பிரிக்கா அணியும் சந்தித்தன. இந்தப் போட்டியில் மோதிய இரு அணிகளுமே வலுவான அணிகள் என்பதால் இந்த போட்டிக்கு பலத்த எதிர்பார்ப்பு இருந்தது.
உலகக்கோப்பை தொடரை இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி ஒளிபரப்பி வருகிறது. அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் முதல் போட்டியை தொலைக்காட்சியில் மட்டும் 11.4 கோடி மக்கள் பார்வையிட்டு இருக்கிறார்கள் என கூறியுள்ளது.
பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின் அடிப்படையில் இந்த தகவலை கூறி இருக்கிறது ஸ்டார் ஸ்போர்ட்ஸ். 11.4 கோடி பார்வையாளர்கள் என்பது மிகப் பெரிய எண்ணிக்கை ஆகும்.
கடைசியாக நடந்த ஐசிசி தொடரான 2017 சாம்பியன்ஸ் ட்ராபி தொடரை விட சுமார் 2.2 மடங்கு பார்வையாளர்கள் அதிகரித்துள்ளதாகவும் இந்த புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. மேலும், இந்த எண்ணிக்கை அனைத்துமே தொலைக்காட்சியுடையது மட்டுமே.
இது தவிர்த்து ஹாட்ஸ்டார் செயலி மூலமும் இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் உலகக்கோப்பை போட்டிகளை பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த தகவல்கள் இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா ஆடிய போட்டி உடையது.
இந்திய அணி ஜூன் 5 முதல் உலகக்கோப்பை போட்டிகளில் பங்கேற்று வருகிறது. இந்திய அணி ஆடத் தொடங்கியது முதல் பார்வையாளர்கள் எண்ணிக்கை இன்னும் சில மடங்கு அதிகரித்து இருக்கலாம் என கூறப்படுகிறது.
எப்படி பார்த்தாலும், உலகக்கோப்பை தொடரை வைத்து செமையாக கல்லா கட்டலாம் என தெரிகிறது. இன்னும் அரையிறுதி இறுதிப் போட்டிகளின் போது உலக சாதனைகளை இந்திய பார்வையாளர்கள் ,முறியடிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கலாம்.