டெல்லி : இந்திய பிரதமர் நரேந்திர மோடி, காயமடைந்து அணியில் இருந்து நீக்கப்பட்ட கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானுக்கு ஆறுதல் கூறி இருக்கிறார்.
தவான் நீக்கத்திற்குப் பின் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதற்கு பதில் அளிக்கும் வகையில் ட்விட்டரில் ஆறுதல் கூறி பதிவிட்டுள்ளார் பிரதமர் மோடி.

இந்திய பிரதமர் காயமடைந்த வீரருக்கு ஆறுதல் கூறும் அரிதிலும், அரிதான நிகழ்வு தற்போது நடந்துள்ளது.
உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய போட்டியில் ஷிகர் தவான் தன் இடது கை பெரு விரலில் காயமடைந்தார். அதனால் போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. அவர் காயம் விரைவில் குணமாகும் பட்சத்தில் அவரை அணியில் இருந்து நீக்க வேண்டாம் என காத்திருந்தனர்.
எனினும், அவர் காயம் குணமாக நீண்டா காலம் ஆகும் என கூறப்பட்டதால், சில நாட்கள் காத்திருப்புக்கு பின் அவரை அணியில் இருந்து நீக்கும் முடிவை எடுத்தது பிசிசிஐ. அவருக்கு மாற்றாக ரிஷப் பண்ட் அணியில் சேர்க்கப்பட்டார்.
இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட பின், தவான் வெளியிட்ட வீடியோவிற்கு ஆறுதல் கூறி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் பிரதமர் மோடி. அவரது பதிவில், "அன்புள்ள தவான், பிட்ச் உங்களை இழந்து வாடும் என்பதில் சந்தேகமே வேண்டாம். நீங்கள் விரைவில் குணமாகி, மீண்டும் களத்திற்கு வருவீர்கள், நாட்டுக்காக நிறைய வெற்றிகளை குவிப்பீர்கள் என்று நம்புகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக தவான் வெளியிட்டு இருந்த உருக்கமான வீடியோவில் தான் ஊருக்கு கிளம்ப வேண்டிய நேரம் இது. ஆனால், உலகக்கோப்பையில் இந்தியாவின் வெற்றிநடை தொடர்ந்து நடக்க வேண்டும் என்று குறிப்பிட்டு ரசிகர்களுக்கு நன்றி கூறி விடை கொடுத்தார்.
தவான் இல்லாத நிலையில், அவருக்கு பதில் ராகுல் இந்திய அணியில் துவக்க வீரராக களமிறங்கி வருகிறார். ராகுல் களமிறங்கிய மிடில் ஆர்டரில் விஜய் ஷங்கர் களமிறங்கி வருகிறார். தற்போது ரிஷப் பண்ட் உத்தேச அணியில் இடம் பெற்றுள்ள நிலையில், அவருக்கு களமிறங்க வாய்ப்பு வழங்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.