சௌதாம்ப்டன் : 2019 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி மிக தாமதமாக ஜூன் 5 அன்று தன் முதல் லீக் போட்டியில் விளையாட உள்ளது.
இந்த நிலையில், இந்திய அணி சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட சந்திப்பை, பத்திரிக்கையாளர்கள் புறக்கணித்த சம்பவம் நடந்தேறி உள்ளது.
மற்ற அணிகள் ஒரு போட்டியில் ஆடி முடித்து விட்டு தங்கள், இரண்டாவது லீக் போட்டிகளில் ஆடி வருகின்றன. இந்திய அணி இன்னும் போட்டிகளில் பங்கேற்காததால், அதிக பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழாமல் இருந்து வந்தது.
மற்ற அணிகள் போட்டிக்கு முன்னும், பின்னும் பேட்டி கொடுத்து வருகின்றன. எனவே, இந்திய அணியின் பேட்டிக்காக பத்திரிகையாளர்கள் காத்துக் கொண்டு இருந்தனர். இந்த நிலையில் இந்திய அணியின் வலைப் பயிற்சிக்குப் பின்னர் இந்திய அணி சார்பாக பேட்டி அளிக்கப்படும் என கூறி ஒரு செய்தி பத்திரிக்கையாளர்களுக்கு வந்துள்ளது.
ஆனால், யார் பேட்டி கொடுப்பார்கள் என்பது குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை. சமீப காலமாக இந்திய அணி சார்பாக வீரர்கள் தவிர்த்து பல முறை உதவி பயிற்சியாளர்கள் எல்லாம் போட்டிகளுக்கு முன் பேட்டி அளித்துள்ளனர்.
அதனால், இந்திய அணி தொடர்பான யார் வந்தாலும் பரவாயில்லை என்ற மனநிலையில் தான் பத்திரிகையாளர்கள் இருந்தனர். ஆனால், இந்திய அணி சார்பாக தீபக் சாஹர் மற்றும் ஆவேஷ் கான் பேட்டி அளிப்பார்கள் என தகவல் வந்துள்ளது. அதைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
காரணம், இவர்கள் இருவரும் இந்திய அணியிலேயே இல்லை. இந்திய பேட்ஸ்மேன்களுக்கு பந்து வீசி பயிற்சி அளிக்க வேண்டி அழைத்து வரப்பட்ட பந்துவீச்சாளர்களில் இருவர் தான் தீபக் சாஹர், ஆவேஷ் கான். தீபக் சாஹர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடி பிரபலமான வீரர். ஆவேஷ் கானும் ஐபிஎல் தொடரில் ஆடி உள்ளார்.
உலகக்கோப்பை தொடர் குறித்து அந்த தொடருக்கான அணியில் இல்லாத இவர்களை எப்படி பேட்டி எடுக்க முடியும்? இவர்களிடம் முடிந்து போன ஐபிஎல் பற்றிதான் கேட்க முடியும்? என கொந்தளித்த பத்திரிக்கையாளர்கள், இந்திய அணி சார்பாக வேறு வீரர் அல்லது பயிற்சியாளர்கள் யாரேனும் பேட்டி கொடுப்பார்களா? என கேட்டனர்.
அதற்கு இந்தியா இன்னும் ஒரு போட்டியில் கூட ஆடாத நிலையில், இந்திய வீரர்கள் எதை குறித்து பேட்டி அளிப்பார்கள் என திருப்பி கேட்டுள்ளனர் இந்திய அணி நிர்வாகத்தினர். இதனால், அனைவரும் பத்திரிக்கையாளர் சந்திப்பை புறக்கணித்தனர். விராட் கோலி கேப்டனான பின்தான் இது போன்ற சம்பவங்கள்அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.