காயம்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் தவான் பேட்டிங் செய்த போது அவரது இடது கை பெருவிரலில் காயம் ஏற்பட்டது. அந்த காயத்தோடு பேட்டிங் செய்து சதம் அடித்த தவான், பின்னர் பீல்டிங் செய்ய வரவில்லை. அவருக்கு பதிலாக ஜடேஜா பீல்டிங் செய்தார்.
எலும்பு முறிவு
பின்னர், தவானுக்கு ஸ்கேன் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர் குறைந்தது அடுத்த மூன்று வார காலம் உலகக்கோப்பை போட்டிகளில் பங்கேற்க முடியாது என கூறப்பட்டது.
என்ன முடிவு?
இந்த நிலையில், அவருக்கு மாற்று வீரராக யாரை அணியில் சேர்ப்பார்கள் என்ற விவாதம் சூடு பிடித்தது. ரசிகர்கள் பலரும் ரிஷப் பண்ட் தான் சரியான மாற்று வீரர் என கூறி வந்தனர். இந்த நிலையில், இந்திய அணி நிர்வாகம் என்ன முடிவு எடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
ரகசிய தகவல்
இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் இங்கிலாந்தில் இருந்து வராத நிலையில், இந்தியாவில் பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து சில ரகசிய தகவல்கள் கசிந்துள்ளன. அதன்படி, இந்திய அணி கேப்டன் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி எடுத்த முடிவுகள் பற்றி தெரிய வந்துள்ளது.
இடது கை அதிரடி வீரர்
விராட் கோலி, ரவி சாஸ்திரி இருவரும் ஷிகர் தவானுக்கு மாற்றாக அவரைப் போல இடது கை அதிரடி வீரரைத் தான் தேர்வு செய்ய வேண்டும் என்ற முடிவில், ரிஷப் பண்ட்டை தேர்வு செய்துள்ளதாக தெரிகிறது.
48 மணி நேரம்
இது மட்டுமின்றி, ரிஷப் பண்ட் அடுத்த 48 மணி நேரத்தில் இங்கிலாந்து செல்ல ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ரிஷப் பண்ட் நிச்சயம் நியூசிலாந்து அணிக்கு எதிராக வரும் வியாழன் அன்று நடைபெற உள்ள போட்டியில் பங்கேற்க முடியாது.
பாகிஸ்தான் போட்டி
அதன் பின் நடைபெறும் போட்டிகளில் அவர் விளையாட வாய்ப்புள்ளது. குறிப்பாக பாகிஸ்தான் போட்டியில் இருந்து அவர் அணியில் விளையாட வாய்ப்புள்ளது. ஒருவேளை பாகிஸ்தான் போட்டியில் ரிஷப் பண்ட் விளையாடினால், அது இந்திய ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கும். முன்னதாக ரிஷப் பண்ட் உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.