பாகிஸ்தான் வெளியேற்றம்
பாகிஸ்தான் அணி உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறவில்லை. அந்த அணி முதல் ஐந்து போட்டிகளில் ஒரு வெற்றி மட்டுமே பெற்றது. இந்திய அணியிடம் தோல்வி அடைந்ததால், கடும் விமர்சனத்தை சந்தித்த அந்த அணி பின்னர் தொடர்ந்து வெற்றி பெற்றாலும், அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறவில்லை.
இந்தியா - இங்கிலாந்து போட்டி
லீக் சுற்றில் ஒரு கட்டத்தில் இந்தியா, இங்கிலாந்து அணியை வீழ்த்தினால், பாகிஸ்தான் அணிக்கு அது சாதகமாக அமையும் சூழல் இருந்தது. ஆனால், இந்தியா அந்தப் போட்டியில் தோல்வி அடைந்தது.
கடும் விமர்சனம்
இந்திய அணி, பாகிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பை சிதைக்கவே தோல்வி அடைந்ததாக பாகிஸ்தான் ரசிகர்கள் குற்றம் சாட்டினர். சில முன்னாள் வீரர்கள் கூட இந்திய வீரர்கள் பொறுமையாக சேஸிங் செய்ததை விமர்சித்து கருத்து கூறி இருந்தார்கள்.
சர்ப்ராஸ் பதில்
இந்த நிலையில், இது குறித்து பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அஹ்மது-விடம் கேட்கப்பட்டது. அப்போது பேசிய அவர், "இல்லை.. இல்லை.. அது தவறு.. அப்படி சொல்லக் கூடாது. இந்தியா எங்களால் தோல்வி அடைந்தது என நான் நினைக்கவில்லை. இங்கிலாந்து சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது." என்றார்.
மன்னிப்பு தேவையில்லை
மேலும், பாகிஸ்தான் அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறவில்லை என்பதால் பாகிஸ்தான் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். உலகக்கோப்பை தொடரில் தங்கள் அணி சிறப்பாக ஆடி 11 புள்ளிகள் வரை பெற்றதால், மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்றார் சர்பராஸ்.