டெல்லி : தோனி அணிந்த ராணுவ முத்திரை பதித்த விக்கெட் கீப்பிங் கிளவுஸ் விவகாரத்தில், தோனிக்கு ஆதரவாக பேசியுள்ளார் இந்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரேன் ரிஜிஜு.
2019 உலகக்கோப்பை தொடரில் இந்தியா தன் முதல் லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை சந்தித்தது. இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதை காட்டிலும், அதிகமாக பேசப்பட்டது தோனி அணிந்து இருந்த ராணுவ முத்திரை பதித்த கிளவுஸ் குறித்து தான்.
தோனி ராணுவ முத்திரை பதித்த கிளவுஸ் அணிந்ததை இந்திய ரசிகர்கள் புகழ்ந்து வந்த அதே சமயம், அவர் அதை அணியக் கூடாது என்று கூறியது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி).
வாவ்.. செஸ் திறமையை வைத்து வீரர்களை கணித்தேன்.. அசத்தல் பவுலிங் ரகசியத்தை சொன்ன சாஹல்!
இதையடுத்து, ராணுவத்தில் லெப்டினன்ட் கலோனல் என்ற கௌரவ பதவியில் இருக்கும் தோனியை எப்படி ராணுவ முத்திரை பயன்படுத்தக் கூடாது என்று கூறலாம் என இந்திய ரசிகர்கள் கோபமடைந்தனர். இதை இணையத்தில் "DhoniKeepTheGlove" என்ற பெயரில் வைரல் ஆக்கினர்.
ஊடகங்களும் இந்த விவகாரத்தை பெரிதாக்கினர். இதையடுத்து இந்திய அளவில் தோனிக்கு பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. இந்த நிலையில் இந்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரேன் ரிஜிஜு, தோனிக்கு ஆதரவாக கருத்து கூறியதோடு பிசிசிஐ, தோனிக்கு ஆதரவாக இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
கிரேன் ரிஜிஜு செய்தியாளர்களிடம் பேசுகையில், "பிசிசிஐ இந்த விவகாரத்தை ஐசிசியிடம் எடுத்துச் சென்று, தீர்வு காணும் என நம்புகிறேன். தோனியின் அடையாளம், நாட்டின் அடையாளம், இராணுவத்தின் அடையாளம். அது அரசியல் அல்ல. அதனால், தோனிக்கு ஆதரவாக பிசிசிஐ இருக்க வேண்டும்" என்று கூறினார்.
இந்திய விளையாட்டுத் துறை அமைச்சரே தோனி விவகாரத்தில் தலையிட்டுள்ளதால், பிசிசிஐக்கு மேலும் அழுத்தம் அதிகரித்துள்ளது. தற்போது பிசிசிஐ, ஐசிசிக்கு எழுத்துப் பூர்வமாக தோனி ராணுவ முத்திரை பதித்த கிளவுஸை அணிய அனுமதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது.
ஒருவேளை ஐசிசி இந்த விவகாரத்தில் "பணக்கார" பிசிசிஐக்காக பணிந்து போய், தோனி ராணுவ முத்திரையை அணிய ஒப்புக் கொண்டால், மற்ற நாடுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கலாம். குறிப்பாக, பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு முதல் ஆளாக இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும். எனவே, தற்போது ஐசிசி தான் கடும் சிக்கலில் இருக்கிறது.
இந்தியாவின் அடுத்த உலகக்கோப்பை லீக் போட்டி வரும் ஜூன் 9 அன்று ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக இந்த விவகாரத்தில் ஒரு முடிவு எட்டப்படுமா? என்பது கேள்விக் குறியே!