டெல்லி : தோனி அணிந்த ராணுவ முத்திரை கிளவுஸ் விவகாரம் பூதாகரமாக சென்று கொண்டிருகிறது, தற்போது, தோனிக்கு பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமி அறிவுரை கூறியுள்ளார்.
சுப்பிரமணியன் சுவாமி "ஆன்டி இந்தியன்ஸ்" பற்றியும் இதில் குறிப்பிட்டு இந்த விவகாரத்தில் உள்ள அரசியலை தன் பார்வையில் கூறி இருக்கிறார். அப்படி என்ன தான் கூறினார்?

இந்தியா - தென்னாப்பிரிக்கா ஆடிய முதல் உலகக்கோப்பை போட்டியில் தோனி பாரா மிலிட்டரியின் பாலிடான் முத்திரை பதித்த விக்கெட் கீப்பிங் கிளவுஸ் அணிந்து விளையாடினார். இது இந்திய ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆனது.
பலரும் தோனியின் நாட்டுப்பற்றை குறித்து பேசி புகழ்ந்து வந்தனர். ஆனால், இது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் விதிகளுக்கு புறம்பானது எனக் கூறி தோனி, குறிப்பிட்ட அந்த கிளவுஸை அணியக் கூடாது என பிசிசிஐ-யிடம் தெரிவித்தது.
இதைக் கண்ட ரசிகர்கள் ராணுவத்தில் கௌரவ லெப்டினன்ட் கலோனலாக இருக்கும் தோனி அந்த முத்திரை அணிந்து தான் போட்டிகளில் விளையாட வேண்டும். அது அவரது உரிமை என பலரும் கூறினர். இந்த நிலையில், சுப்பிரமணியன் சுவாமி இந்த விவகாரத்தில் வலிய வந்து அறிவுரை கூறியுள்ளார்.
அவரது பதிவில், "கேட்காமலேயே நான் தோனிக்கு அளிக்கும் அறிவுரை : ஐசிசி விதிகளின் படி நீங்கள் நடந்து கொள்வதால் எதையும் இழக்கப் போவதில்லை, அது எத்தனை மோசமாக இருந்தாலும். உங்களது அருமையான கிரிக்கெட்டுக்கு சம்பந்தமே இல்லாத இந்த சர்ச்சையை முடித்து விடுங்கள். ஆன்டி இந்தியன் சக்திகள் இது வளர வேண்டும் என நினைக்கிறார்கள்." என்று அறிவுரை கூறி இருந்தார்.
சுப்பிரமணியன் சுவாமி கூறியதில் எல்லாம் சரிதான். ஆனால், கடைசியில், ஆன்டி இந்தியன் சக்திகள் இதை வளர வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்று கூறி இந்த விவகாரத்தை அரசியலோடு முடிச்சுப் போட்டுள்ளார்.
சுப்பிரமணியன் சுவாமியின் இந்த பதிவின் கீழ் கருத்து கூறியுள்ள ஒருவர், உங்கள் கருத்தை ஏற்க மாட்டேன். இந்த விஷயத்தில் இந்தியா ஐசிசியை எதிர்த்து நிற்க வேண்டும். உலகக்கோப்பையில் இருந்து இந்திய அணியை வெளியே அனுப்பினால் கூட பரவாயில்லை என்று கூறியுள்ளார். அதற்கு சுவாமி பதில் கூறியுள்ளார்.
சுவாமி தன் பதிலில், "அவர்கள் தோனியை மட்டும் தடை செய்தால்.. என்ன செய்வீர்கள்?" என கேள்வி எழுப்பியுள்ளார். இப்போதைய நிலைமையில், சுப்பிரமணியன் சுவாமி கூறியது தான் நடக்கப் போகிறது. தோனி நினைத்தாலும், அந்த கிளவுஸை அணிய முடியாது. ஐசிசி திட்டவட்டமாக அது விதிமீறல் என கூறிவிட்டது.