இங்கிலாந்து அதிரடி
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி அதிரடியாக ஆடியது. எப்போதும் அந்த அணியின் ஸ்கோர் ஓவருக்கு 5 முதல் 6 ரன்களை ஒட்டியே இருந்தது. கடைசி கட்டத்தில் பென் ஸ்டோக்ஸ் அதிரடியாக ஆட அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் 337 ரன்கள் குவித்தது.
சிக்ஸர்கள் விளாசல்
அந்த அணி அவ்வப்போது சிக்ஸர்கள் அடித்து வந்ததே, ரன் ரேட் எகிற முக்கிய காரணம். 50 ஓவர்களில் அந்த அணி 13 சிக்ஸர்கள் விளாசி இருந்தது. அந்த அளவு பிட்ச்சும் பேட்டிங் செய்ய ஒத்துழைத்தது.
இந்தியா நிதான ஆட்டம்
அடுத்து ஆடிய இந்திய அணியின் முக்கிய பேட்ஸ்மேன்கள் ரோஹித் சர்மா - விராட் கோலி, இருவரும் தாங்கள் அவுட் ஆடும் வரை நிதான ஆட்டம் ஆடினர். சிக்ஸர்களுக்கு பெயர் போன ரோஹித் சர்மாவும், சிறந்த பேட்ஸ்மேனான கோலியும் ஒரு சிக்ஸ் கூட அடிக்கவில்லை.
பண்ட் - பண்டியா என்ன செய்தார்கள்?
அவர்களுக்கு அடுத்து வந்த அதிரடி பேட்ஸ்மேன்கள் ரிஷப் பண்ட், ஹர்திக் பண்டியாவும் சிக்ஸர் விளாசுவதில் கில்லாடிகள் தான். ஆனால், அவர்களும் ஆளுக்கு சுமாராக 30 பந்துகளை சந்தித்தும் ஒரு சிக்ஸர் கூட அடிக்கவில்லை.
எத்தனை சிக்ஸ்?
கடைசியாக ஓவருக்கு 15 ரன் அடிக்க வேண்டிய நிலையில், ஆமை வேகத்தில் பேட்டிங் செய்து வெறுப்பேற்றிய தோனி கடைசி ஓவரில் தோல்வி உறுதி என தெரிந்த பின் ஒரே ஒரு சிக்ஸ் அடித்தார்.
தோல்விக்கு இது தான் காரணம்
இந்திய அணியின் தோல்விக்கு இந்திய பேட்ஸ்மேன்கள் யாருமே அதிரடியாக ஆட முயலாமல் இருந்தது தான் காரணம். இது குறித்து பேசிய கேப்டன் கோலி, பிர்மிங்காம் மைதானத்தின் பவுண்டரி எல்லைகள் கோணல் மாணலாக இருந்தது என்பதை காரணமாக கூறி சப்பைக்கட்டு கட்டினார்.
கோலி என்ன சொன்னார்?
ஒரு பவுண்டரி எல்லை 59 மீட்டரிலும், ஒரு பக்க பவுண்டரி எல்லை 82 மீட்டரிலும் இருந்தது அடித்து ஆடுவதில் சிரமத்தை ஏற்படுத்தியது என்றார். அதே பிட்ச்சில் தான் இங்கிலாந்து அணி 13 சிக்ஸர்கள் அடித்தது என்பதை மறந்து விட்டார்.