வெஸ்ட் இண்டீஸ் தொடர்
ஒரு நிமிடம் கூட விடாமல் கல்லா கட்ட வேண்டும் என நினைக்கும் பிசிசிஐ, உலகக்கோப்பை தொடர் முடிந்த இரு வாரங்களில் வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான கிரிக்கெட் தொடருக்கு ஏற்பாடு செய்துள்ளது. உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டி ஜூலை 14 நடைபெற உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் தொடர் ஆகஸ்ட் 3 முதல் துவங்க உள்ளது.
போட்டிகள்
மூன்று டி20, மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடராக நடைபெற உள்ளது. மேலும், இந்த தொடரின் போட்டிகள் அமெரிக்காவில் நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கோலி, பும்ராவுக்கு ஓய்வு
வெஸ்ட் இண்டீஸ் தொடரில் கேப்டன் விராட் கோலி மற்றும் உலகின் நம்பர் 1 வேகப் பந்துவீச்சாளர் பும்ராவிற்கு டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் ஓய்வு அளிக்கப்படும். இவர்கள் இருவரும் டெஸ்ட் தொடரில் மட்டும் பங்கேற்பார்கள் என இப்போதே அறிவித்துள்ளது பிசிசிஐ.
காரணம் என்ன?
விராட் கோலி ஆஸ்திரேலியா தொடர் முதல் விளையாடி வருகிறார். பும்ரா மிகவும் முக்கியமான பந்துவீச்சாளர். எனவே. இவர்கள் இருவருக்கும் ஓய்வு என காரணம் கூறி இருக்கிறது பிசிசிஐ. ஆனால், மற்ற இந்திய வீரர்கள் குறித்து எதுவும் பேசவில்லை.
மற்ற வீரர்களுக்கு?
அனைத்து இந்திய வீரர்களும் ஆஸ்திரேலிய தொடர், ஐபிஎல் தொடர், உலகக்கோப்பை என தொடர்ந்து கிரிக்கெட் விளையாடி வருகின்றனர். அவர்களுக்கும் கொஞ்சம் ஓய்வு தேவை. உலகக்கோப்பை தொடர் முடிந்த இரு வாரங்களில் இந்திய வீரர்களால் எந்த அளவு ஓய்வு பெற முடியும்? ஆனால், அதையெல்லாம் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்ற மனநிலையில் இருக்கிறது பிசிசிஐ.
தொடரில் மாற்றம்
இன்னொரு வேடிக்கை என்னவென்றால், விராட் கோலி - பும்ராவிற்கு ஓய்வு அளிக்க வேண்டி, முதலில் நடக்க இருந்த வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர் கடைசியாக நடைபெறும் வகையில் அட்டவணையில் மாற்றம் செய்துள்ளது பிசிசிஐ. இதனால், உலகக்கோப்பை தொடருக்கு பின் சுமார் ஒரு மாத காலம் கோலி - பும்ராவிற்கு ஓய்வு கிடைக்கும். அப்ப கோலி, பும்ராவுக்கு வந்தா ரத்தம்..மத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா?