உள்ளூர் "சரண கோஷங்களை" நம்பி பாகிஸ்தானுக்கு எதிராக "கரணம்" அடிக்கக் காத்திருக்கும் இந்தியா!
அடிலைட்: ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்தியர்களின் பேராதரவு தங்களுக்கு தெம்பளிக்கும் என்ற நம்பிக்கையில் இந்திய வீரர்கள் உள்ளனர். குறிப்பாக பாகிஸ்தானுடன் நடைபெறவுள்ள முதல் போட்டியின்போது இந்திய ரசிகர்களின் ஆதரவை எதிர்நோக்கியுள்ளது இந்திய அணி.
இந்தியா, பாகிஸ்தான் எப்போது மோதினாலும்,எங்கு மோதினாலும் அது போர்தான்... அதிலும் உலகக் கோப்பை போட்டி என்று வந்து விட்டால் எங்கிருந்துதான் இந்தியாவுக்கு அந்தத் தெம்பு வருமோ, பாகிஸ்தானை வீழ்த்தாமல் ஓய்ந்ததில்லை இந்தியா.
இதுவரை நடந்த உலகக் கோப்பையில் பாகிஸ்தானுடன் மோதிய அனைத்துப் போட்டிகளிலும் இந்தியாவே வென்றுள்ளது. அது இம்ரான் கானாக இருந்தாலும் சரி. மியான்தத் ஆக இருந்தாலும் சரி.. இந்தியா பயந்ததே இல்லை.
இப்போது மீண்டும் ஒரு போருக்கு இரு நாட்டு அணிகளும் தயாராகி வருகின்றன. இந்த முறை எப்படியும் இந்தியாவை வீழ்த்த வேண்டும் என்ற வேகத்தில் பாகிஸ்தான் உள்ளது. ஆனால் வரலாறு தொடர்வதில் இந்தியா வேகமாக உள்ளது.

உற்சாகத்தில் ரசிகர்கள்
இந்திய அணியின் ஆட்டத்தைப் பார்க்க ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் இந்திய ரசிகள் பெரும் ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் உள்ளனர்.

தினசரி மைதானத்திற்கு வருகை
அடிலைட் மைதானத்தில்தான் இந்தியா, பாகிஸ்தான் போட்டி நடைபெறவுள்ளது. இதனால் தினசரி மைதானத்திற்கு ரசிகர்கள் வருகிறார்கள். தங்களது அபிமான வீரர்களைப் பார்க்க முண்டியடிக்கின்றனர்.

வீரர்கள் தரிசனம்
புதன்கிழமையன்று இந்திய அணியைச் சந்திக்க ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதற்கான ஏற்பாட்டை தெற்கு ஆஸ்திரேலிய மாகாண அரசு செய்திருந்தது.

26,000 இந்தியர்கள்
தெற்கு ஆஸ்திரேலிய மாகாணத்தில் 26,000 இந்தியர்கள் வசிக்கின்றனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் இங்கு இந்தியர்கள் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. பிற நாட்டவரை விட இந்தியர்களே அதிகம் இங்கு வருகின்றனர்.

ஆதரவுக்குப் பஞ்சமே இல்லை
எனவே அடிலைட் போட்டியின்போது இந்தியாவுக்கு ரசிகர்களின் ஆதரவு அமோகமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

ரசிகர்கள் ஆதரவு அமோகம் - டோணி
கேப்டன் டோணி இதுகுறித்து கூறுகையில், நாங்கள் 3 மாதங்களை இங்கு கடந்து விட்டோம். அதில் ஒரு மாதம் அடிலைடில்தான் கழிந்தது. இங்குள்ள இந்திய ரசிகர்கள் எங்களுக்குப் பெரும் ஆதரவாக உள்ளனர். அது மகிழ்ச்சி தருகிறது என்றார் டோணி.

ஜீதேகா பாய் ஜீதேகா
போட்டி 15ம் தேதிதான் நடக்கிறது என்ற போதிலும் இப்போதே அடிலைடில் ஜீதேகா பாய் ஜீதேகா (வெல்க சகோதரர்களே வெல்க) என்ற கோஷம் ஆக்கிரமிக்கத் தொடங்கி விட்டது. வீரர்களை நேற்று ரசிகர்கள் சந்தித்தபோது இந்தியா வெல்லும் என்ற கோஷத்தால் அடிலைட் மைதானத்தின் அடி வயிறே கலங்கிப் போயிருக்கும்.

இதுதான் வேணும்
கிட்டத்தட்ட இந்தியாவில் இருப்பது போன்ற உணர்வில்தான் வீரர்களும் உள்ளனர். எனவே பாகிஸ்தான் போட்டியின்போது இந்திய ரசிகர்களின் ஆதரவு கோஷம் இந்திய வீரர்களுக்குப் புதுத் தெம்பை அளிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.


Click it and Unblock the Notifications