புற்றுநோயால் அவதி
புவனேஷ்வர் குமாரின் தந்தை கிரண் பால் உத்தரபிரேதசத்தில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஆவார். 63 வயதாகும் அவர் கடந்த சில வருடங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நொய்டாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்தார். அங்கு அவருக்கு கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. பின்னர் ஓரளவு குணமடைந்ததால் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிற்கு திரும்பினார்.
உடல்நலக்குறைவு
இந்நிலையில் கடந்த சில வாரங்களாக மீண்டும் அவரின் உடல் நிலை மோசமடைந்துள்ளது. இதன்காரணமாக அவர் அருகாமையில் உள்ள முஸாஃபர் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவரின் உயிர் பிரிந்தது.
கடைசி நிமிடம்
அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலும், இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலும் புவனேஷ்வர் குமாருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதன் காரணமாக அவர் தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வந்தார். இதனால் தந்தையின் கடைசி நிமிடத்தில் அவருடன் இருக்கும் வாய்ப்பு புவனேஷ்வர் குமாருக்கு கிடைத்ததாக கூறப்படுகிறது.
சக வீரர்கள் ஆறுதல்
புவனேஷ்வர் குமாருக்கு கிரிக்கெட் உலகை சேர்ந்த பலரும் தங்களது ஆறுதல்களை தெரிவித்து வருகின்றனர். இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்காக தற்போது மும்பையில் பயோ பபுளில் உள்ள சக இந்திய அணி வீரர்கள் தொலைப்பேசி மூலம் புவனேஷ்வருக்கு ஆறுதல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.