
வெளியேறிய அமெரிக்க படைகள்
ஆஃப்கானிஸ்தானில் அமெரிக்க மற்றும் நேட்டோ படைகளும் ஆக்கிரமித்திருந்தனர். பின்னர் அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப், ஆஃப்கானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற்றப்படும் என அறிவித்தார். அதே போல தற்போதைய அதிபர் ஜோ பைடனும் வாக்குறுதி கொடுத்தார். இதனையடுத்து ஆஃப்கானில் இருந்து பெருவாரியான அமெரிக்கப்படைகள் வெளியேறிவிட்டன.

தாலிபான்
இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட தாலிபான் தீவிரவாத அமைப்பு, ஆஃப்கானிஸ்தானை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி அந்நாட்டின் பலப்பகுதிகளை கைப்பற்றி வருகிறார்கள். இதனை எதிர்த்து அரசுப்படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது. இரு தரப்பினருக்கும் நடைபெற்று வரும் கடும் மோதலில், 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்து வருகிறார்கள்.

கொல்லப்படும் மக்கள்
தாலிபான்கள் குறிப்பாக ஆஃப்கானிஸ்தானின் நகர்புற பகுதிகளை கட்டுக்குள் கொண்டு வந்து ஆட்சியை கவிழ்க்க முயன்று வருகிறார்கள். இதனால் நகரத்தில் இருக்கும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிற்குள்ளே பயத்தில் பதுங்கி கிடக்கின்றனர். ஆய்பெக் நகரத்தில் பல்வேறு அரசுக்கட்டிடங்களிலும், அடுக்குமாடி குடியிருப்புகளிலும் அவர்கள் புகுந்து ஆக்கிரமித்து வருகிறார்கள். ஒரு புறம் அரசுப்படை தாக்குதல், மற்றொரு புறம் தாலிபான் தாக்குதல் என ஆஃப்கான் மக்கள் சித்திரவதைப்பட்டு வருகின்றனர்.

ரஷித்கானின் உருக்கமான பதிவு
இந்நிலையில் மக்களின் மன வேதனை குறித்து ரஷித் கான் உருக்கமான ட்விட்டர் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில், அன்பார்ந்த உலகத் தலைவர்களே.. எனது தேசம் மிகப்பெரும் பிரச்னையில் சிக்கி தவிக்கிறது. ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள், குழந்தைகள், பெண்கள் தினந்தோறும் கொன்று குவிக்கப்படுகிறார்கள். மக்களின் வீடுகள், சொத்துக்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் புலம்பெயர்ந்துள்ளார்கள். எங்களை இந்த பிரச்னையில் கை விட்டுவிடாதீர்கள். ஆஃப்கான் மக்களை கொல்வதை நிறுத்துங்கள், ஆஃப்கானிஸ்தானை அழிப்பதை விட்டுவிடுங்கள், எங்களுக்கு அமைதி தேவை என குறிப்பிட்டுள்ளார்.

ஆதரவு
ரஷித் கானின் இந்த உருக்கமான பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். கிரிக்கெட் வீரர்கள் பலரும் ரஷித் கானுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்டு வருகின்றனர். இவரின் இந்த மனம் உருக வைக்கும் கோரிக்கைக்கு உலக தலைவர்கள் செவிசாய்ப்பார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











