டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் , ராஜ்யசபா எம்.பியாக பதவியேற்றுள்ளார். ஆம் ஆத்மி கட்சி சார்பாக பஞ்சாம் மாநிலத்திலிருந்து அவர் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார்.
ஹர்பஜன் சிங், கிரிக்கெட் விளையாடும் போதே அவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் இருந்த நிலையில், தற்போது ஓய்வு பெற்ற நிலையில் இந்த பதவி அவரை தேடி வந்துள்ளது.
இந்த நிலையில், ராஜ்யசபா எம்.பியான உடன் ஹர்பஜன் சிங் வெளியிட்ட முதல் அறிவிப்பு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

முன்னதாக எம்.பி.யான ஹர்பஜன் சிங், நேரடியாக மக்களை சந்திக்காமல் ஐபிஎல் தொடருக்கு வர்ணனையாளராக பணிபுரிகிறார் என்ற குற்றச்சாட்டு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. கிரிக்கெட் வர்ணனையிலும் தோனி குறித்து ஹர்பஜன் சொன்ன விமர்சனமும் ரசிகர்களை கடுப்படைய செய்தது.
இந்த நிலையில் தான் ஹர்பஜன் சிங் ஒரு சூப்பர் கோல் போட்டுள்ளார். இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், என்னுடைய ராஜ்யசபா எம்.பி.க்கான ஊதியத்தை மொத்தமும், பஞ்சாப்பில் உள்ள விவசாயிகளின் பெண் குழந்தைகளின் கல்விக்காக வழங்க உள்ளதாக ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
நம் நாட்டின் முன்னேற்றுத்திற்கான பாதையில் நானும் இணைந்துள்ளதாக குறிப்பிட்ட ஹர்பஜன் சிங், என்னால் முடிந்த விசயங்களை நாட்டுக்காக செய்வேன் என்நு ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். ஹர்பஜன் சிங்கின் இந்த அறிவிப்புக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதே போன்று மற்ற எம்.பி. பிரபலங்களும் தங்களது ஊதியத்தை நல்ல காரியத்திற்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.