மும்பை: இந்தத் தலைமுறை சச்சின் தான் கிரிக்கெட்டின் கடவுள் எனக் கொண்டாடிக் கொண்டிருந்தாலும், இதற்கு முந்தைய தலைமுறைக்கு நன்றாக விளையாடும் கிரிக்கெட் வீரர் என்றால் அது சுனில் கவாஸ்கர் தான் எனத் தெரிவித்துள்ளார் முன்னாள் கிரிக்கெட் வீரர் பாபு நட்கார்னி.
முன்னாள் இந்திய கேப்டனாக இருந்தவர் சுனில் மனோகர் கவாஸ்கர். நேற்று தனது 65வது பிறந்த நாளைக் கொண்டாடிய கவாஸ்கர், இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துவக்க வீரராக களமிறங்கி, எதிரணியினரை தனது சிறப்பான ஆட்டத்தில் திடுக்கிட வைத்தவர். டெஸ்ட் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமை பெற்ற கவாஸ்கர், 30 சதங்களையும், 51.12 ரன்கள் சராசரியையும் வைத்திருந்தார். கடந்த 1987ம் ஆண்டோடு ஓய்வை அறிவித்த கவாஸ்கர், கடைசியாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 96 ரன்களை குவித்தார்.

இந்நிலையில், கவாஸ்கரின் பிறந்தநாளை முன்னிட்டு லெஜண்ட்ஸ் கிளப் நேற்று மாலை நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தது. அதில் கலந்து கொண்ட கவாஸ்கரின் நண்பர்கள் மற்றும் சக வீரர்கள் அவரது விளையாட்டைக் குறித்து நினைவு கூர்ந்து பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.
ஹெல்மெட் அணியவில்லை...
தற்போது 81 வயதாகும் முன்னாள் வீரர் நட்கர்னி கவாஸ்கர் குறித்து கூறுகையில், 'தனது கிரிக்கெட் போட்டிகள் அனைத்திலும் ஹெல்மெட் அணியாமல் விளையாடியவர் என்ற பெருமைக்குரியவர் கவாஸ்கர்.
இப்போ டெண்டுல்கர் மாதிரி...
இப்போது கிரிக்கெட் என்றால் டெண்டுல்கர் என எப்படிக் கொண்டாடுகிறார்களோ, அப்படித் தான் முன்பு கவாஸ்கர் தான் கிரிக்கெட் என இந்திய ரசிகர்களுக்கு இருந்தது.
டெஸ்ட் போட்டிகள்...
கிரிக்கெட் போட்டிகள் அப்போதெல்லாம் இவ்வளவு தீவிரமாக இருந்ததில்லை. குறைவான டெஸ்ட் போட்டிகளே விளையாடப்பட்டன, அதுவும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை. எங்கள் காலத்தில் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட நான்கு ஆண்டுகள் கூட காத்திருந்திருக்கிறோம்.
அர்ப்பணிப்பு...
கவாஸ்கரின் இந்த புகழ் ஒரே நாளில் வந்துவிடவில்லை. தனது பள்ளி, கல்லூரி என கிரிக்கெட் விளையாட்டில் படிப்படியாக உயர்ந்தவர் கவாஸ்கர். ஆனால், ஆரம்பகாலத்தில் எப்படி அர்ப்பணிப்புடன் விளையாடினாரோ அதே போல் தான் கடைசி வரை அவர் விளையாடினார்.
கிரிக்கெட் என்றால்...
எங்களைப் பொறுத்தவரை கிரிக்கெட் என்றால் கவாஸ்கர், பேட் மிட்டன் என்றால் நடேகர் மற்றும் டென்னிஸ் என்றால் (ராமநாதன்) கிருஷ்ணன் என்று தான் வகுத்து வைத்திருந்தோம். இவர்கள் தான் மேற்கூரிய இந்த விளையாட்டுக்களை எளிமையாக்கியவர்கள் எனக் கூறலாம்' என இவ்வாறு அவர் கவாஸ்கரைப் புகழ்ந்து பேசினார்.
பால்ய சினேகிதர்...
அவரைத் தொடர்ந்து கவாஸ்கரின் பால்ய நண்பரும், சக கிரிக்கெட் வீரருமான மிலிந்த் ரேஜே பேசுகையில், 'நாங்கள் ஒன்றாகவே வளர்ந்தோம். ஆனால், கவாஸ்கர் இத்தகைய புகழின் உச்சியில் அமருவார் என நான் எனது சிறுவயதில் அறிந்திருக்கவில்லை. பின்னாளில் அவரின் ஆட்டத்தைப் பார்த்து அசந்து விட்டேன்.
பிரமாதமான ஆட்டமில்லை...
நாங்கள் பள்ளி வகுப்பறையில் ஒரே பெஞ்ச்சில் தான் அமர்ந்திருப்போம். ஒன்றாகவே பள்ளி, கல்லூரியில் நடந்த கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவோம். அப்போதெல்லாம் அவர் ஒன்றும் பிரமாதமாக விளையாடியதில்லை.
ஆனந்த அதிர்ச்சி...
ஆனால், திடீரென எங்கிருந்து அவ்வளவு அசாத்திய வேகம் வந்தது எனத் தெரியவில்லை. கல்லூரிகளுக்கிடையேயான கிரிக்கெட் போட்டியில் அவர் விளாசித் தள்ளியதைப் பார்த்து நான் ஆனந்த அதிர்ச்சி அடைந்து விட்டேன்' எனத் தெரிவித்துள்ளார்.
கவாஸ்கரின் கேப்டன்...
பள்ளி மற்றும் கல்லூரி கிரிக்கெட் அணியில் கவாஸ்கருக்கு கேப்டனாக இருந்தவர் மிலிந்த் என்பது குறிப்பிடத்தக்கது.