ஒத்திவைக்கப்பட்ட கால்பந்தாட்டம்
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இத்தாலியில் கால்பந்தாட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் கால்பந்தாட்ட வீரர்கள் அனைவரும் தங்களது வீடுகளில் முடங்கினர். கால்பந்தாட்டத்தின் சூப்பர் ஹீரோவாக உள்ள கிறிஸ்டியானோ ரொனால்டோவும் மதெய்ராவில் உள்ள தன்னுடைய வீட்டில் முடங்கியிருந்தார்.
பிரதமர் அறிவிப்பு
இந்நிலையில் முதல்தர அணிகள் திங்கட்கிழமை முதல் கால்பந்தாட்டத்திற்கான பயிற்சி ஆட்டங்களை துவங்கலாம் என்று இத்தாலி பிரதமர் கியூசெப் கோண்டே செய்தியாளர் சந்திப்பு மூலம் அறிவித்துள்ளார். மேலும் இந்த பயிற்சி ஆட்டங்களை துவங்குவதற்கு முன்னதாக, பாதுகாப்பு வழிமுறைகளை மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டும என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
தனித்தனியாக பயிற்சி
இன்று முதல் அங்கு ஜூவன்டஸ் உள்ளிட்ட அணிகள் தனித்தனியாக தங்களது வீரர்களுக்கு பயிற்சிகளை முடுக்கி விட்டுள்ளது. கடந்த 5ம் தேதி முதலே சில வீரர்களுக்கு தனிப்பட்ட முறையில் பயிற்சிகளை துவங்கியுள்ளதாக அந்த அணி ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்த வீரர்களுக்கு தனித்தனியாக பயிற்சியாளர்களை கொண்டு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
நாளை முதல் பயிற்சியில் பங்கேற்பு
இந்நிலையில் கடந்த 5ம் தேதி தன்னுடைய ஊரான மதெய்ராவில் இருந்து இத்தாலி திரும்பிய கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, 14 நாட்கள் தனிமையில் இருந்தார். அவருடைய தனிமைப்படுத்துதல் இன்றுடன் நிறைவடைந்ததை அடுத்து நாளை முதல் அவர் தன்னுடைய பயிற்சிகளில் பங்கேற்கவுள்ளார். இதனிடையே அடுத்த மாதம் 13ம் தேதி கால்பந்தாட்ட போட்டிகள் மீண்டும் துவங்கவுள்ளன.