
கொரோனா காரணமாக தள்ளிவைப்பு
தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணியினர் டி20 தொடரை வெற்றி கொண்டனர். தொடர்ந்து கொரோனா பாதிப்பு காரணமாக இரண்டாவதாக நடைபெறவிருந்த ஒருநாள் தொடர் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து வரும் 26ம் தேதி திட்டமிடப்பட்டிருந்த இலங்கை அணியினரின் சுற்றுப்பயணம் குறித்து கேள்வி எழுந்தது.

திட்டமிட்டபடி நடக்கும் என அறிவிப்பு
ஆனால் இரண்டு டெஸ்ட் போட்டிகளை கொண்ட இந்த தொடர் திட்டமிட்டபடி நடைபெறும் என்று கிரிக்கெட் தென்னாப்பிரிக்கா மற்றும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் போர்டுகள் உறுதிப்படுத்தியுள்ளன. வரும் 26ம் தேதி செஞ்சூரியன் மைதானத்தில் முதல் போட்டியும் ஜனவரி 3ம் தேதி ஜோஹன்ஸ்பர்க்கில் இரண்டாவது போட்டியும் நடைபெறவுள்ளது.

தொடரை நடத்த அறிவுறுத்தல்
முன்னதாக அர்ஜூனா டி சில்வா தலைமையிலான ஸ்ரீலங்கா கிரிக்கெட் போர்டின் மருத்துவ குழுவினர் சோதனை மேற்கொண்டு இந்த தொடரை தொடரலாம் என்று அறிவுறுத்தியதாக கிரிக்கெட் தென்னாப்பிரிக்கா தெரிவித்துள்ளது. மேலும் இந்த சூழலில் தொடர்ந்து ஒத்துழைப்பு அளித்துவரும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் வாரியத்திற்கும் நன்றி தெரிவித்துள்ளது.

ஜனவரி 14ல் துவக்கம்
இந்த சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, இங்கிலாந்துடன் 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணி சொந்த மண்ணில் விளையாடவுள்ளது. இந்த தொடர் ஜனவரி 14ம் தேதி துவங்கவுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் திட்டமிடப்பட்டிருந்த இந்த தொடர் கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











