சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு புள்ளிப் பட்டியலில் கடைசி இடமான 10வது இடத்தில் இடம்பெறுவதிலிருந்து தப்பிக்க கடைசி ஒரு வாய்ப்பு மட்டுமே உள்ளது. 2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படுமோசமாக விளையாடி இதுவரை 13 போட்டிகளில் மூன்று வெற்றிகளை மட்டுமே பெற்று இருக்கிறது. மொத்தம் 6 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் பத்தாவது இடத்தில் உள்ளது.
ஒன்பதாவது இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் 8 புள்ளிகளைப் பெற்றிருக்கிறது. இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது கடைசி போட்டியில் சாத்தியமே இல்லாத பெரிய வெற்றியை பெற்றால் மட்டுமே ஒன்பதாவது இடத்துக்கு முன்னேற முடியும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இன்னும் ஒரு போட்டி மட்டுமே உள்ளது. அதில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக விளையாட உள்ளது. அந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றால் 8 புள்ளிகளைப் பெறும். ஆனால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை முந்தி ஒன்பதாவது இடத்தைப் பிடிக்க வேண்டுமென்றால், நெட் ரன் ரேட் (Net Run Rate - NRR) அதிகமாக இருக்க வேண்டும்.
தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நெட் ரன் ரேட் -0.549 என்பதாக உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் நெட் ரன் ரேட் -1.030 என்பதாக உள்ளது.
இந்த நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை நெட் ரன் ரேட் அடிப்படையில் முந்த வேண்டும் என்றால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் அல்லது 7.4 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்ட வேண்டும்.
இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்தப் போட்டியிலும் இதுபோன்ற அசாத்தியமான வெற்றிகளைப் பெறவில்லை. மேலும், அந்த அணியில் இன்னும் பேட்டிங் மற்றும் பௌலிங்கில் பலவீனங்கள் உள்ளன. எனவே, சென்னை சூப்பர் கிங்ஸ் 107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதோ அல்லது வெற்றி இலக்கை 7.4 ஓவர்களில் எட்டுவதோ நடக்காது என்றே கருத வேண்டி உள்ளது.
இதைச் செய்யவில்லை என்றால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2025 ஐபிஎல் தொடரின் புள்ளிப் பட்டியலில் பத்தாவது இடத்தில் தான் இருக்கும். இந்த ஆண்டு தோனி தலைமையில் பெரும்பாலான போட்டிகளில் சிஎஸ்கே அணி விளையாடிய நிலையில், இது அவரது கேப்டன்சிக்கு ஏற்பட்ட பின்னடைவாகவே அமைந்துள்ளது.