பயிற்சி ஆட்டங்கள் பாதிப்பு
மற்ற அணிகளை போல ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பதற்காக கடந்த மாதத்தில் யூஏஇ வந்த சிஎஸ்கே அணிக்கு அங்கு அதிர்ச்சி காத்திருந்தது. சில தினங்களிலேயே அணியின் தீபக் சஹர் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகிய வீரர்கள் மற்றும் 11 ஊழியர்களுக்கு கொரோனா பாதித்தது. இதையடுத்து அணியின் பயிற்சி ஆட்டங்கள் பாதிக்கப்பட்டது.
முதல் போட்டியில் வெற்றி
ஆனால் சில தினங்களிலேயே சுதாரித்த சிஎஸ்கே, மற்ற வீரர்களை கொண்டு பயிற்சிகளை துவங்கியது. குறைந்த காலமே பயிற்சி மேற்கொண்ட போதிலும் கடந்த சனிக்கிழமை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் பட்டையை கிளப்பி, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று விசில் போட்டது அந்த அணி.
குவாரன்டைனில் வைக்கப்பட்ட கெய்க்வாட்
தீபக் சஹர் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோருக்கு கொரோனா பாதித்த நிலையில், சஹர் அதிலிருந்து கடந்த வாரமே மீண்டு மீண்டும் பயிற்சிகளில் ஈடுபட்டு, சிஎஸ்கே -மும்பை இந்தியன்ஸ் அணியின் முதல் போட்டியில் பங்கேற்று விளையாடினார். ஆனால் ருதுராஜ் தொடர்ந்து குவாரன்டைனில் ஈடுபடுத்தப்பட்டார்.
மகிழ்ச்சி தெரிவித்த சிஎஸ்கே அணி
இந்நிலையில், அவருக்கு எடுக்கப்பட்ட 2 கொரேனா பரிசோதனைகளிலும் நெகட்டிவ் ரிசல்ட் வந்த நிலையில் பிசிசிஐ மருத்துவ குழுவினரின் பிட்னஸ் டெஸ்ட்டிலும் தன்னை நிரூபித்து தற்போது மீண்டும் இன்றுமுதல் பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்றுள்ளார் ருதுராஜ். இதுகுறித்து சிஎஸ்கே அணி தனது டிவிட்டர் பக்கத்தில் அவரது புகைப்படத்தை வெளியிட்டு மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.