
விமர்சனம்
எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கடந்த ஆண்டு சிறப்பாக அமையவில்லை. இதுவரை 3 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள அந்த அணி, கடந்த சீசனில் வெறும் 12 புள்ளிகள் மட்டுமே பெற்று புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தை பிடித்தது. இதனால் இந்தாண்டு ஐபிஎல்-காக வீரர்களை முன்கூட்டியே அழைத்து தீவிர பயிற்சி முகாமை நடத்தி வருகிறது அணி நிர்வாகம்.

இளம் வீரர்
கடந்த ஆண்டு சி.எஸ்.கே மோசமாக ஆடினாலும், அதில் ஒரு வீரர் மட்டும் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அவரின் பெயர் ருத்ராஜ் கெயிக்வாட். முதல் 3 போட்டிகளிலும் அவர் சொதப்பிய போது தோனி அவருக்கு வாய்ப்பு கொடுத்தார். பின்னர் அடுத்த 3 போட்டிகளில் யாரும் எதிர்பார்க்காத வகையில் 65*, 70, 62* ரன்களை எடுத்து அசத்தினார். மொத்தம் 6 போட்டிகளில் ஆடிய அவர் 204 ரன்களை எடுத்தார்.

தோனி
இந்நிலையில் அது குறித்து இந்தாண்டு பயிற்சி முகாமின் போது பேசியுள்ளார். அதில், நான் மோசமாக ஆடிய போது தோனி என்னிடம் வந்து, உன் விளையாட்டை ரசித்து மகிழ்ச்சியுடன் அனுபவித்து ஆடு, முடிவு குறித்து யோசிக்காதே, எப்போதும் பதற்றப்படாதே என தெரிவித்தார். மேலும் என்னால் சிறப்பாக ஆட முடியும் என அவர் நம்பிக்கை வைத்தது தெரிந்த பிறகே எனக்கு என் ஆட்டத்தில் சரியான பாதை கிடைத்தது.

நெகிழ்ச்சி
நான் ஆட்டத்தின் முடிவு என்ன ஆகும் என்று நினைத்தே ஆடி வந்தேன். ஆனால் அதனை செயல்படுத்துவதுதான் முக்கியம் என தோனியிடம் இருந்து கற்றுக்கொண்டேன். மேலும் தோனியிடம் நான் கற்றுக்கொண்ட முக்கியமான பாடம் என்னவென்றால், கிரிக்கெட்டிலும், வாழ்விலும் நல்ல காலம், கெட்ட காலம் இரண்டுமே வரும், அவை இரண்டையும் ஒரே மாதிரி எடுத்துக்கொள்ள வேண்டும். அனைத்து நாட்களும் நமக்கானதாக இருக்காது என்பதை உணர வேண்டும். ஆனால் நமக்கான நாள் வந்தால் அப்போது கடும் முயற்சி செய்து சாதிக்க வேண்டும் என ருத்ராஜ் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











