சறுக்கிய மிடில் ஆர்டர்
ஷார்ஜாவில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பவுலிங்கை தேர்வு செய்தார். இதில் தொடக்கம் முதலேயே பெங்களூரு தொடக்க பேட்ஸ்மேன்கள் விராட் கோலி, படிக்கல் அடித்து ஆட தொடங்கினர். சென்னை பவுலர்களின் பந்துகள் சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் பறந்தன. குறிப்பாக, தாகூர் ஓவரில் கோலி அடித்த அவுட் ஆஃப் தி ஸ்டேடியம் பறந்தது. அந்த அணி முதல் விக்கெட்டுக்கு 111 ரன்கள் குவித்தது. ஐபிஎல் வரலாற்றில், சென்னை அணிக்கு எதிராக பெங்களூரு அணியின் ஒரு அதிகபட்ச பார்ட்னர்ஷிப் இதுதான். 41 பந்துகளில் 53 ரன்கள் எடுத்த கோலி, பிராவோ ஓவரில் கேட்ச்சானர். பிறகு, டி வில்லியர்ஸ் 11 பந்துகளில் 12 ரன்கள் எடுத்திருந்த போது ஷர்துல் ஓவரில் கேட்ச்சானர். அதே ஓவரில் படிக்கல் 50 ரன்களில் 70 ரன்கள் எடுத்து கேட்ச்சானார். பிறகு மேக்ஸ்வெல்லும் 11 ரன்களில் அவுட்டானார்.
மேட்ச் மாறிய தருணம்
10 ஓவர்களில் 90 ரன்கள் குவித்த பெங்களூரு, அடுத்த 7 ஓவர்களில் ஜஸ்ட் 50 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த 7 ஓவர்கள் தான், மேட்சை ஆர்சிபியிடமிருந்து சிஎஸ்கே பக்கம் திரும்பியது. குறிப்பாக பிராவோ, தாகூர் ஆகியோரை மிகச் சரியாக பயன்படுத்தி, சரியான இடங்களில் ஃபீல்டர்களை நிறுத்தி, அட்டகாசமாக ரன்களை கட்டுப்படுத்தினர் கேப்டன் தோனி. அதன் பிறகு பெங்களூரு அணியால் மீண்டு வரவே முடியவில்லை. டி வில்லியர்ஸ், மேக்ஸ்வெல் என்று ஹிட்டர்கள் இருந்தும் அவர்களால் எதுவுமே செய்ய முடியவில்லை. ஷார்ஜா ஸ்லோ பிட்ச் என்பதால், இறுதிக்கட்டத்தில் பேட்ஸ்மேன்கள் ரன்கள் அடிக்க ரொம்பவே திணறினார்கள். இதனால், பெங்களூர் அணியால் 20 ஓவர்கள் முடிவில், 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. கடைசி 10 ஓவர்களில் அந்த அணி 66 ரன்களே எடுக்க முடிந்தது.
வலுவான அடித்தளம்
இதன் பிறகு களமிறங்கிய சென்னை அணியில், கெய்க்வாட் 38 ரன்களும், டு பிளசிஸ் 31 ரன்களும் எடுத்து வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். பிறகு மொயீன் அலி 23 ரன்களும், அம்பதி ராயுடு 32 ரன்களும் எடுக்க, சென்னை அணியின் ரன் ஸ்கோர் எந்தவித தொய்வும் இன்றி வேகமாக முன்னேறியது. இறுதியில் சுரேஷ் ரெய்னா 20 ரன்களும், தோனி 7 ரன்களும் எடுத்து களத்தில் நின்று வெற்றியை உறுதி செய்தனர். சென்னை சூப்பர் கிங்ஸ், 18.1வது ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்து வெற்றிப் பெற்றது.
சிக்கலில் பெங்களூரு
சென்னை அணியைப் பொறுத்தவரை இந்த போட்டியின் வெற்றி மூலம் 14 புள்ளிகள் பெற்றுள்ளது. அதாவது, 19 போட்டிகளில் விளையாடி 7வது வெற்றியை பதிவு செய்துள்ளது. இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. இன்னும் 1 போட்டியில் வென்று 16 புள்ளிகள் பெற்றுவிட்டால் பிளே ஆஃப் சுற்றுக்கு சென்னை முன்னேறிவிடலாம். அதேசமயம், 9 போட்டிகளில் 5 வெற்றி, 4 தோல்வியுடன் 10 புள்ளிகளுடன் பெங்களூரு மூன்றாம் இடத்தில் உள்ளது.