BIG BREAKING - சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி செய்தி..! ஐபிஎல் தொடரிலிருந்து விலகுகிறார் தீபக் சாஹர்
பெங்களூரு: ஐபிஎல் 2022ஆம் ஆண்டு தொடரின் பெரும்பாலான போட்டிகளிலிருந்து தீபக் சாஹர் விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 3வது டி20 போட்டியின் போது சிஎஸ்கே வீரர் தீபக் சாஹருக்கு காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து இலங்கை தொடரிலிருந்து விலகிய தீபக் சாஹர் , பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தங்கி காயத்திலிருந்து மீண்டு வரும் பயிற்சியில் ஈடுபட்டார்.

பங்கேற்க முடியாது
தீபக் சாஹருக்கு ஏற்பட்டுள்ள காயம் குணமடைய நீண்ட நாட்கள் ஆகும் என்று அங்குள்ள மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் தீபக் சாஹர் பெரும்பாலான ஐபிஎல் போட்டியில் விளையாட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இதனால் தீபக் சாஹரை 14 கோடி ருபாய் கொடுத்து எடுத்த சிஎஸ்கே அணிக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பவர்பிளே விக்கெட்
சென்னை அணிக்காக 58 போட்டிகளில் விளையாடியுள்ள தீபக் சாஹர், 58 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதில் பவர் பிளேவில் மட்டும் 42 விக்கெட்டுகளை சாய்த்து சென்னை அணிக்கு நல்ல தொடக்கத்தை தருவார் தீபக் சாஹர். இதே போன்று பேட்டிங்கிலும் தீபக் சாஹர் கடந்த சில காலமாக அசத்தி வருகிறார்.

ஆல்ரவுண்டர்
கடந்த ஆண்டு இலங்கைக்கு எதிராக 69 ரன்கள், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 54 ரன்கள், வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 38 ரன்கள் அடித்துள்ளார். இதனால் தீபக் சாஹர் சென்னை அணியின் பேட்டிங்கையும் வலுப்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் தான் ஏலத்தில் தீபக் சாஹருக்க பெருந்தொகையை சிஎஸ்கே செலவு செய்தது.

பெரும் இழப்பு
தீபக் சாஹர் காயத்திலிருந்து பெரும்பாலான போட்டியில் விளையாடாமல் போனால், சென்னை அணிக்கு அனுபவம் உள்ள இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் இல்லாத நிலை ஏற்படும். இதனால் தோனி, இளம் வீரர்களையே நம்பி களமிறங்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார். தீபக் சாஹர் இல்லாதது சிஎஸ்கேவிற்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.


Click it and Unblock the Notifications