கொழும்பு : வளரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி ஏற்கனவே அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற நிலையில் கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் எதிர்கொண்டது.
இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் ஏ அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய ஏ அணியில் இடம்பெற்றுள்ள சிஎஸ்கே வீரர் ஹங்கர்கேகர் அபாரமாக செயல்பட்டு பாகிஸ்தான் சுக்குநூறாக உடைத்தார்.

ஹங்கர்கேகர் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் வீரர்கள் தடுமாறினர். சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அனுபவம் உள்ள சயிம் ஆயுப் மற்றும் உமையர் யூசுப் ஆகியோர் ஹங்கர்கேகர் பந்து வீச்சில் டக் அவுட் ஆகி வெளியேறினர்.இதனைத் தொடர்ந்து ஹர்ஷித் ராணா மற்றும் சுழற் பந்துவீச்சாளர்கள் ரியான் பராக் மற்றும் நிசாந்த் சிந்து ஆகியோர் கட்டுக்கோப்பாக பந்து வீசி பாகிஸ்தானுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர்.
அந்த அணியில் காசிம் அக்ரம் அபாரமாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டார். அப்போது மீண்டும் பந்து ஹங்கர்கேகர் கையில் சென்றது.அவர் தனது வேகத்தால் காசிம் அக்ராமை 48 ரன்களில் வீழ்த்தினார்.இதேபோன்று முகமது வசீம் மற்றும் சாணவாஸ் தஹானி ஆகியோர் விக்கெட்டையும் ஹங்கர்கேகர் கைப்பற்ற எட்டு ஓவர்கள் வீசி 42 ரன்கள் விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி ஹங்கர்கேகர் அசத்தினார்.
பாகிஸ்தான அணியில் முபசிர் கான் 28 ரன்களும், மெகரான் மும்தாஸ் 25 ரன்களும் எடுக்க அந்த அணி 48 ஓவர் முடிவில் 25 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.இதில் ஹங்கர்கேகரை தவிர மற்றொரு சிஎஸ்கே வீரர் நிசாந்த் சிந்து எட்டு ஓவர்கள் வீசி 42 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். இதுபோன்று மனாவ் சுதார் என்ற வீரர் 10 ஓவர்கள் வீசி 36 ரன்களை விட்டுக்கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஐபிஎல் வீரர் ரியான் பராக்கும் ஆறு ஓவர்கள் வீசி 24 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை எடுத்தார்.