லண்டன்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியவர் கலீல் அஹமத். சிஎஸ்கே பந்துவீச்சில் ஒரு அளவுக்கு சிறப்பாக செயல்பட்டது என்றால் அதற்கு கலீல் அகமதின் அபார பந்துவீச்சு தான் காரணம். 14 போட்டிகளில் 15 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தி இருந்தார்.
மேலும் சிஎஸ்கே அணிக்காக அதிக டாட் பால்களை நடந்து முடிந்த சீசனில் வீசியவர் என்ற பெருமையும் அவர் பெற்றிருந்தார். 29 என்ற அளவில் அவரது பந்துவீச்சு சராசரி இருந்தது. இந்த சூழலில் கலீல் அகமது இந்திய அணிக்காக 11 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 15 விக்கெட்களையும், 18 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 16 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருந்தார்.

அது மட்டும் இல்லாமல் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான தொடரில் இந்திய ஏ அணி சார்பாக விளையாடிய கலீல் அஹமத் இரண்டாவது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்டில் ஒரே இன்னிங்சில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இடதுகை வேகப்பந்துவீச்சு இங்கிலாந்து மண்ணில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
இதனால் கலில் அகமத் இந்தியா அணியில் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் நாடு திரும்பினார். இந்த சூழலில் இந்திய அணியில் சேர்க்கப்படாத கலில் அகமதை இங்கிலாந்து அணி கவுண்டி கிரிக்கெட் அணியான எஸ்சக்ஸ் அணி விளையாடுவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளது. ஒரு நாள் டி20 மற்றும் டெஸ்ட் என நடப்பு சீசன் முழுவதும் அனைத்து போட்டிகளிலும் பங்கேற்கும் வகையில் இந்த ஒப்பந்தம் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
கலீல் அஹமத் தற்போது ஒரு நாள் தொடரிலும் அதன் பிறகு டி20 தொடரிலும் இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடுவார். அதன்பிறகு கவுண்டி டெஸ்ட் போட்டியில் கலில் அகமத் விளையாடப் போகிறார். ஹர்பஜன் சிங், கௌதம் கம்பீர், முரளி விஜய் சர்துல் தாக்கூர் போன்ற பல இந்திய வீரர்கள் கடந்த காலங்களில் எஸ்சக்ஸ் அணிக்காக விளையாடிய நிலையில் தற்போது இந்த பட்டியலில் சிஎஸ்கே வீரர்களின் கலீல் அகமதும் சேர்ந்திருக்கின்றார். இங்கிலாந்தில் விளையாடப் போகும் அனுபவம் கலில் அகமதின் கிரிக்கெட் வாழ்க்கைக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என்று வல்லுநர்களும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.