சென்னை: சென்னை அணியின் இளம் வீரர் பதிரானா வீசிய முதல் பந்தில் சிக்சர் விளாசிய மணீஷ் பாண்டேவை, அதே ஓவரின் கடைசி பந்தில் வீழ்த்தி சிஎஸ்கேவின் இளம் சிங்கம் அசத்தியுள்ளது.
ஐபிஎல் தொடரின் 55வது லீக் போட்டியில் சென்னை அணியை எதிர்த்து டெல்லி அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் எம்எஸ் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து பேட்டிங் ஆடிய சென்னை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 167 ரன்கள் சேர்த்துள்ளது. வலிமையான டெல்லி அணியின் டார் ஆர்டருக்கு இந்த இலக்கு போதுமா என்று ரசிகர்கள் கவலையை வெளிப்படுத்தினர்.

இந்த நிலையில் கண்மூடி திறப்பதற்கு பவர் பிளே ஓவர்களிலேயே டேவிட் வார்னர், சால்ட் மற்றும் மிட்செல் மார்ஷை சென்னை அணி வீழ்த்தியது. இதனால் டெல்லி அணி 25 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. இந்த நிலையில் மணீஷ் பாண்டே - ரைலி ரூஸொவ் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் 12 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 76 ரன்களை சேர்த்திருந்தது. இந்த நிலையில் அதிரடியாக ஆட வேண்டிய நிலைக்கு டெல்லி அணி தள்ளப்பட்டது. இதனால் சென்னை அணி சார்பாக பதிரானா அட்டாக்கில் கொண்டு வரப்பட்டார்.
அவர் வீசிய முதல் பந்திலேயே சிக்சர் விளாசி அதிர்ச்சி கொடுத்தார். இதனால் சென்னை அணி ரசிகர்களும் மிரண்டு போயினர். ஆனால் முதல் பந்தில் கொடுத்த அடிக்கு, கடைசி பந்தில் பதிரானா பதிலடி கொடுத்தார். கடைசி பந்தில் 149 கிமீ வேகத்தில் வீசப்பட்ட யார்க்கரில் மணீஷ் பாண்டே எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். ஒரு நிமிடம் பதிரானா வீசிய பந்து மலிங்காவை நினைவுபடுத்தி சென்றது.