சென்னை: அமெரிக்காவில் தொடங்கவுள்ள மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் டெக்ஸால் சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவதற்காக, சென்னை அணியின் பவுலிங் பயிற்சியாளர் டுவைன் பிராவோ ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் கிரிக்கெட் ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அங்கும் கிரிக்கெட்டை வணிகமயமாக்கும் நோக்கில் மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது. ஐபிஎல் தொடரை போலவே, அமெரிக்காவில் மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் ஜூலை மாதம் 14ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதில் மொத்தமாக 6 அணிகள் பங்கேற்க உள்ள நிலையில், 4 அணிகளை கொல்கத்தா, சென்னை, மும்பை மற்றும் டெல்லி ஆகிய அணிகளின் உரிமையாளர்கள் வாங்கியுள்ளார்.

அந்த அணிகளுக்கு டெக்ஸால் சூப்பர் கிங்ஸ், லாஸ் ஏஞ்சலஸ் க்னைட் ரைடர்ஸ், சியாட்டல் ஆர்காஸ், மும்பை நியூ யார்க் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் டெக்ஸாஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள வீரர்களின் பெயர்கள் இன்று முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில் சிஎஸ்கே அணிக்காக ஆடி வரும் டெவோன் கான்வே, மிட்செல் சான்ட்னர் ஆகியோர் டெக்ஸாஸ் அணிக்காகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல் ஆஸ்திரேலிய அணியின் ஆல் ரவுண்டர் டேனியல் சாம்ஸ், தென்னாப்பிரிக்கா அணியின் டேவிட் மில்லர் மற்றும் ஜெரால்ட் கொயட்சே ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் சென்னை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரான டுவைன் பிராவோ, டெக்ஸால் அணியின் வீரராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனால் டெக்ஸால் அணி பலம் வாய்ந்த அணியாக மாறியுள்ளது. அதுமட்டுமல்லாமல் அமெரிக்க மைதானங்களில் டுவைன் பிராவோ ஏற்கனவே விளையாடியுள்ளார்.
அதேபோல் டெக்ஸால் அணியின் பயிற்சியாளராகவும் பிளெம்மிங் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே எஸ்ஏடி20 லீக் தொடரில் ஜேஎஸ்கே அணிக்கும் பயிற்சியாளராக செயல்பட்டார். இதனால் இந்தியா சிமெண்ட்ஸ் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் மூன்று அணிகளுக்கும் ஸ்டீபன் பிளெம்மிங்கே பயிற்சியாளராக செயல்படுகிறார். அதேபோல் சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரரான மார்கலும் பயிற்சியாளராக இணைந்துள்ளார்.