
அணியின் பின்னடைவு
சிஎஸ்கே அணி வீரர்களுக்கு கடந்த வாரத்தில் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் அந்த அணியின் வீரர்கள் தீபக் சஹார் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஊழியர்கள் ஆகிய 13 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதிப்படுத்தப்பட்டது. மேலும் அணியின் முக்கிய வீரர் சுரேஷ் ரெய்னாவும் சொந்த காரணங்களால் அணியிலிருந்து விலகி நாடு திரும்பியுள்ளது அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.

ஹோட்டலில் முடங்கிய வீரர்கள்
ஐபிஎல்லின் மற்ற அணிகள் தங்களது குவாரன்டைனை முடித்துக்கொண்டு பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சிஎஸ்கே வீரர்களுக்கு கொரோனா பாதித்துள்ளதால் அவர்கள் பயிற்சிகளில் ஈடுபடாமல் உள்ளனர். ஏற்கனவே 5 மாதங்களுக்கு எந்த பயிற்சியும் இல்லாமல் வீட்டில் முடங்கியிருந்த வீரர்கள் தற்போது பயிற்சிகளை மேற்கொள்ள முடியாமல் ஹோட்டல் அறைகளில் முடங்கியுள்ளனர்.

அணியின் சிஇஓ அறிவிப்பு
இந்நிலையில் சிஎஸ்கே வீரர்களுக்கு நேற்று எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் அனைத்து வீரர்களுக்கும் நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளதாக அந்த அணியின் சிஇஓ விஸ்வநாதன் தெரிவித்திருந்தார். ஆயினும் சஹார் மற்றும் ருதுராஜ் உள்ளிட்ட 13 பேர் தொடர்ந்து 14 நாட்கள் குவாரன்டைனில் இருப்பார்கள் என்றும் கூறினார்.

சிஇஓ விஸ்வநாதன் அறிக்கை
இதனிடையே, சிஎஸ்கே வீரர்களுக்கு நாளை மேலும் ஒரு கொரோனா டெஸ்ட் எடுக்கப்படவுள்ளது. இதையடுத்து நாளை மறுதினம் முதல் அவர்கள் அனைவரும் பயிற்சி முகாம்களில் ஈடுபடுவார்கள் என்றும் விஸ்வநாதன் கூறியுள்ளார். மேலும் 14 நாட்கள் குவாரன்டைனை முடித்துக் கொண்டு அதையடுத்து எடுக்கப்படவுள்ள இரண்டு பரிசோதனைகளிலும் நெகட்டிவ் வந்தபிறகு சஹார் மற்றும் ருதுராஜூம் பயிற்சிகளில் ஈடுபடுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











