சென்னை: ஒருநாளில் 5 லிட்டர் பால் குடிக்கிறார் என்ற வதந்தி தொடர்பாக சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி பதில் அளித்துள்ளார். 2005ஆம் ஆண்டு முதல் தோனி தொடர்பாக இந்த தகவல் பேசப்பட்டு கொண்டே இருந்தது. அவரின் சிக்ஸ் ஹிட்டிங் பவருக்கு இதுவே காரணம் என்று கூறப்பட்டு வந்த நிலையில், அதனை முற்றிலும் வதந்தி என்று பதில் அளித்துள்ளார்.
2004ஆம் ஆண்டு இந்திய அணியின் விக்கெட் கீப்பராக அறிமுகமானவர் தோனி. மிகப்பெரிய சிக்சர்களை விளாசிய தோனியால், பாகிஸ்தான் ரசிகர்களே அதிர்ச்சியடைந்தனர். ஏனென்றால் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களால் மட்டுமே அப்போது பெரிய பெரிய சிக்சர்கள் அடிக்கப்பட்டு வந்தன. இதனால் தோனியின் அதிரடியாக பேட்டிங் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

அப்போது தோனி ஒருநாளிற்கு 5 லிட்டர் பால் குடிப்பதே அவரின் ஃபிட்னஸ் மற்றும் வலிமைக்கு காரணம் என்று சில தகவல்கள் வெளியாகியது. இதனை தோனி ஒருநாளும் மிஸ் செய்ய மாட்டார் என்றும் கூறப்பட்டது. சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக பேசப்பட்டு வரும் இந்த விஷயம் தொடர்பாக தோனியிடமே கேள்வி எழுப்பப்பட்டது.
அந்த கேள்விக்கு தோனியே பதில் அளித்துள்ளார். அதில் தோனி பேசுகையில், எனக்கு பால் குடிக்கும் பழக்கம் உள்ளது உண்மைதான். ஆனால் ஒருநாளுக்கே மொத்தமாக ஒரு லிட்டர் அளவிற்கு தான் பால் குடிப்பேன் என்று நினைக்கிறேன். கூடுதலாக 4 லிட்டர் என்பது கொஞ்சம் ஓவர்தான். சராசரி மனிதர் தினமும் 5 லிட்டர் பால் குடிப்பது எளிதல்ல என்று தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் தோனி தனக்கு பட்டர் மில்க் மற்றும் மில்க் ஷேக் மட்டுமே பிடித்தமானது என்றும் தெரிவித்திருக்கிறார். சில நாட்களுக்கு முன்பாக தோனி சைவ உணவு மட்டுமே சாப்பிடுவார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், தனக்கு மிகவும் பிடித்த உணவு பட்டர் சிக்கன் என்றும் தெரிவித்துள்ளார். அதற்கு பன்னீர் பட்டர் மசாலாவும், பட்டர் சிக்கனும் ஒன்றுதானே என்று கேட்ட போது, இரண்டும் ஒன்றல்ல என்று தெரிவித்தார்.
இந்த ஐபிஎல் தொடரில் தோனி மிகச்சிறந்த ஃபார்மில் இருக்கிறார். இதுவரை 8 போட்டிகளில் ஆடியுள்ள தோனி, 134 ரன்களை விளாசி இருக்கிறார். ஆனால் சிஎஸ்கே அணியின் செயல்பாடுகள் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் அடுத்து வரும் 6 போட்டிகளில் 6லும் வென்றால் மட்டுமே சிஎஸ்கே அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.