மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தல தோனி, விடுமுறைக்காக நண்பர்களுடன் அமெரிக்கா சென்றுள்ளார். அதன் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே பகிரப்பட்டு வருகிறது.
சென்னை அணியின் கேப்டனாக தோனி, 5வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று அசத்தினார். ஆனால் ஐபிஎல் தொடரின் போதே முழங்காலில் காயத்துடன் ஆடிய தோனி, இறுதிப்போட்டிக்கு பின் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன்பின் 6 வாரங்களாக ராஞ்சியில் உள்ள தனது வீட்டில் முழுமையான ஓய்வில் இருந்தார்.

அவ்வப்போது சில நண்பர்களையும், முன்னாள் வீரர்களையும் மட்டுமே தோனி சந்தித்தார். அந்தப் புகைப்படங்களும் ரசிகர்களிடையே ட்ரெண்டாகியது. பின்னர் எல்ஜிஎம் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட தோனி, பின்னர் அடுத்த ஐபிஎல் தொடருக்கு தயாராக தொடங்கினார். இதற்காக ஜிம்மே கதியென்று கடந்த சில வாரங்களாக தோனி இருந்தார்.
இந்த நிலையில் தனது நண்பர்களுடன் தோனி திடீரென அமெரிக்காவுக்கு விடுமுறையை கொண்டாட பயணம் மேற்கொண்டுள்ளார். வழக்கமாக குடும்பத்தினருடன் விடுமுறையை கொண்டாடும் தோனி, இம்முறை நண்பர்களுடன் பயணம் மேற்கொண்டதற்கான காரணம் என்ன என்று புரியாமல் ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.
இந்த நிலையில் தோனி தனது நண்பர்களுடன் அமெரிக்கா சென்றதற்கான காரணம் குறித்து தெரிய வந்துள்ளது. கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றாக யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடர் இன்று தொடங்கவுள்ளது. இதனை காண்பதற்காகவே தோனி தனது நண்பர்களுடன் அமெரிக்கா சென்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.
வழக்கமாக டென்னிஸ், கால்பந்து மற்றும் பேட்மிண்டன் ஆகிய போட்டிகள் மீது தோனிக்கு அதிக ஆர்வமுண்டு. அதிலும் டென்னிஸ் மற்றும் பேட்மிண்டன் கோர்ட்-களை தனது வீட்டிலேயே வைத்துள்ளார். நண்பர்களுடன் விளையாடும் பழக்கம் கொண்ட தோனி, உடல்தகுதியுடன் இருக்க ஜிம்மை விடவும் மற்ற விளையாட்டுகளை விளையாடும் பழக்கம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.